ராஜராஜ சோழன் இந்து மன்னனா? வெற்றி மாறன் பேசியது உண்மை தான்.. சீனுக்குள் வந்த சீமான்!
சென்னை: ராஜராஜ சோழனை இந்து மன்னனாக மாற்றிவிட்டார்கள் என்று இயக்குநர் வெற்றி மாறன் பேசிய கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ம.பொ.சிவஞானத்தின் 27ஆவது நினைவு தினத்தையொட்டி சென்னை தி.நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறுகையில், தமிழக எல்லை மீட்புப் போராளி, சிலம்பு செல்வர் என்று மக்களால் அழைப்படக் கூடிய தலைவர் ம.பொ.சி. அவரது நினைவு நாளில் போற்றுவதில் பெருமையடைகிறோம் என்று தெரிவித்தார்.

திராவிட இயக்கங்கள்
தொடர்ந்து சினிமாவை திராவிடம் எடுத்துக்கொண்டதால் தான் அது மக்களுக்கான கலையாக மாறியது என்று வெற்றிமாறன் பேசிய கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, வெற்றிமாறன் சொன்னது உண்மைதான். குறிப்பிட்ட சமூகங்களிடம் இருந்த திரைக்கலையை பொதுமைப்படுத்தியது திராவிட இயக்கங்கள் தான்.

பராசக்தி திரைப்படம்
முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் வரை திரைத்துறையில் இருந்தவர்கள். பராசக்தி படம் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. யதார்த்த உரையாடல்களுக்கு கொண்டு வந்தது திராவிட இயக்க தலைவர்கள் தான். அதனால் வெற்றிமாறன் அப்படி குறிப்பிட்டுள்ளார். என்று தெரிவித்தார்.

ராஜராஜ சோழன் பற்றி சீமான்
தொடர்ந்து ராஜராஜ சோழனை இந்து மன்னனாக மாற்றிவிட்டார்கள் என்று வெற்றிமாறன் கூறிய கருத்துக்கு பதிலளித்த சீமான், ராஜராஜ சோழனை இந்து மன்னர் என்று கூறுவது எல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. இது வள்ளுவருக்கு காவி பூசியது போல் தான். அந்த காலத்தில் இந்த நாடும் கிடையாது, இந்த மதமும் கிடையாது. அவர் சிவனை வழிபட்ட சைவ மரபினர் என்று உலகிற்கே தெரியும். இன்றைய சூழலில் ஆரியம் ராஜராஜ சோழனை தனக்கானவராக மாற்றி வருகிறது. வெற்றிமாறன் இவற்றையெல்லாம், அனுமதிக்க கூடாது என்று சொல்கிறார் என்று தெரிவித்தார்.

வெற்றிமாறன் பேச்சு
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60 வது பிறந்தநாளை அக்கட்சியினர் மணிவிழாவில் பேசிய வெற்றிமாறன், நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்.சினிமாவிலும் நிறைய அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications