தங்கமணியும் வேலுமணியும் பதற்றமாக என்னிடம் ஓடி வந்தார்கள்.. நினைவிருக்கா இபிஎஸ்?.. ஓபிஎஸ் நெத்தியடி
சென்னை: முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் என்னை பதற்றமாக வந்து சந்தித்தார்கள் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஓ பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஓபிஎஸ் கூறியதாவது: நாமக்கல்லில் அதிமுக 51 ஆவது ஆண்டு நிறுவன ஆண்டை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அந்த கூட்டணியில் யாரெல்லாம் இணைய போகிறார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும். தினகரனையும் அதிமுகவில் இணைக்க போவதாக கூறப்படும் வதந்திகளுக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்? அதிமுகவை எம்ஜிஆர் தொண்டர்களுக்கான இயக்கமாக உருவாக்கினார். தொண்டர்களுக்காகவே இந்த இயக்கம் 50 ஆண்டுகாலம் உருவாகி மாபெரும் இயக்கமாக உள்ளது.

தொண்டர்கள்
அனைத்து தொண்டர்களும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கையாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது குறித்து முறையாக பத்திரிகையாளர்களை அழைத்து சொல்வேன். உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. துணை முதல்வர் பதவிக்கென எந்த அதிகாரங்களும் கிடையாது. நான் நடத்திய தர்மயுத்தத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கர்மயுத்தம் என கூறியிருக்கார். அதாவது ஜெயக்குமார் வாயிலிருந்து நல்ல விஷயமே வராது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மாவட்ட கழக செயலாளர் என்ற பட்டியல் தற்போது வந்து கொண்டிருக்கிறது. அது நிறைவடையும் தருவாயில் உள்ளது.

நிர்வாகிகள்
மாவட்ட கழக செயலாளர்கள் அனைத்து நிர்வாகிகளின் பட்டியலையும் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். முறைப்படியாக அதை அறிவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த பணிகள் எல்லாம் பூர்த்தியானவுடன் உறுதியாக மாவட்ட வாரியாக எங்களுடைய தொணடர்களை சந்திக்கிற சுற்றுப்பயணம் உறுதியாக நடைபெறும். திமுகவின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைகளை அனுப்பி வருகிறேன். இதன் மூலம் நான் திமுகவுடன் கூட்டணி வைப்பேனா என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

திமுக ஆளும் கட்சி
திமுக ஆளும்கட்சி, அவர்களை எதிர்க்கும் எதிர்க்கட்சியாக அதிமுகவாகிய நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒரு ஆளுநரை பற்றி கருத்துகளை வெளியே பேசுவது தவறான முன்னுதாரணமாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் தனக்குரிய விதிகளின்படிதான் செயல்படுகிறார். ஆளுநர் என்ற பதவி குறித்து இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. அவரை தேவையில்லை என கூறும் அதிகாரம் யாருக்கும் இல்லை. கடந்த அதிமுக ஆட்சியில் துணை வேந்தர் பதவிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறிய குற்றச்சாட்டில் தவறு இருந்தால் நானாக இருந்தாலும் சட்டப்படி என் மீது நடவடிக்கை எடுக்கலாம். தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற இடத்தில் என் பெயர் இருக்கிறது, எனவே நான் அதிமுக கொடியை பயன்படுத்துவேன்.

பழனிசாமிக்கு கண்டனம்
நாமக்கல் கூட்டத்தில் பழனிசாமி கூறியதை நான் கடுமையாக வன்மையாக கண்டிக்கிறேன். அன்றைக்கு இருந்த சூழலில் நான் தர்மயுத்தத்தை தொடங்கினேன். யாருக்காக தொடங்கினேன் என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாகவே தெரியும். பழனிசாமி முதல்வராக இருந்ததை எதிர்த்துதான் நான் வாக்களித்தேன். அப்போது தங்கமணியும் வேலுமணியும் என்னிடம் வந்து டிடிவி தினகரன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறார். அப்படி கொண்டு வந்தால், திமுக, தினகரன், உங்கள் ஓட்டு ஆகியவையும் சேர்ந்தால் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற நிலையில் பதற்றத்தோடு என்னை சந்தித்தார்கள்.

சசிகலா அணி
சசிகலா அணியிலிருந்து இவர்கள் பிரிந்து விட்ட சூழலில் டிடிவி தினகரன் கொண்டு வந்த தீர்மானத்தை அவரோடு சேர்ந்து நான் ஆதரித்திருந்தால் ஆட்சி கவிழ்ந்திருக்கும். அரசுக்கு நான் தந்த ஆதரவினால்தான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி 5 வாக்குகளில் காப்பாற்றப்பட்டது என்பதுதான் உண்மை. அந்த எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் அவர் என்னை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் செயல்பட்டார் என்பதை சொல்லிக் கொள்கிறேன். அவர் எந்த இடத்தில் எல்லாம் ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டார் என்பதை பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். அது உரிய நேரத்தில் வெளியிடப்படும்.

துணை முதல்வர் பதவியா
எடப்பாடி பழனிசாமி எனக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்தேன் என்கிறார். நான் கேட்கிறேன், இவருக்கு முதல்வர் பதவியை யார் கொடுத்தது, சசிகலாதான், தவழ்ந்து வந்த இவரை சசிகலா தட்டி கொடுத்து முதல்வராக்கினார். அப்படிப்பட்ட சசிகலாவுக்கே இவர் துரோகம் செய்தவர். 2001, 2014 ஆகிய காலகட்டங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக்கு முதல்வர் பதவிகளை தந்தார். முதல்வர் பதவி பெரிதா, துணை முதல்வர் பதவி பெரிதா, நான் துணை முதல்வர் பதவியே வேண்டாம் என்றேன். அப்போது தங்கமணியும் வேலுமணியும் இருந்தார்கள். பிரதமர் மோடிதான் துணை முதல்வர் பதவியை ஏற்கச் சொன்னார்.

அவமானமாகிவிடும்
மேலும் ஒன்றை எடப்பாடி சொல்கிறார். நான் ஜானகி அணியில் இருந்தேன் என்கிறார். யார் இல்லை என சொன்னது, எம்ஜிஆர் பல வாட்ஸ் விளக்குகளின் வெளிச்சத்திற்கு முன்பு நடித்து சம்பாதித்த பணத்தில் கட்டப்பட்ட எம்ஜிஆர் மாளிகைக்கு அவருடைய பெயரை சூட்ட முன் மொழிந்தது ஜேசிடி பிரபாகரன்தான். அதை நாங்கள் எல்லாம் வழிமொழிந்தோம். தன் பெயரை வைக்கக் கூடாது என்றார். மேலும் அங்கு உருவாக்கும் தளங்களுக்கு ஜானகி அம்மா பெயரையம் ஜெயலலிதா பெயரையும் வைக்கிறோம் என சொன்னதற்கு எம்ஜிஆர் மறுத்துவிட்டார். எனவே இப்படி நிறைய நிகழ்வுகள் உள்ளன. தேவையில்லாமல் பொய் பேசக் கூடாது. இந்த உண்மைகளை எல்லாம் நான் சொன்னால் எடப்பாடிக்குத்தான் அவமானமாக போய்விடும். இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.












Click it and Unblock the Notifications