தேதி குறிச்சாச்சி.. சென்னையில் ஜுன் 20ல் ஓ பன்னீர் செல்வம் அணி முக்கிய ஆலோசனை! தலைமை பண்ருட்டியார்
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அணியின் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஜுன் 20ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் அவரது அணி செயல்பட்டு வருகிறது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் அணி பாஜக கூட்டணியில் இடம்பெற்றது. பாஜக கூட்டணியில் ஓ பன்னீர் செல்வம் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவர் திமுக கூட்டணி வேட்பாளரான இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனியிடம் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் தான் வரும் 20 ம் தேதி ஓ பன்னீர் செல்வம் அணி சார்பில் சென்னையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில், ‛‛அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டம் என்பது சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் இருக்கும் ஜானகி கிருஷ்ணா ஹாலில் 20.06.2024 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.
அதற்கு முன்பாக சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இத்தகைய சூழலில் தான் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது.
இதனால் அதிமுகவில் செயல்பட்டவர்கள் தனித்தனியாக செயல்படுவதை தவிர்த்து ஒன்றாக இணைய வேண்டும் அப்போது தான் மீண்டும் அதிமுக எழுச்சி பெறும் என நீக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் அவர்களை கட்சியில் இணைக்க விரும்பவில்லை. இதற்கிடையே தான் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த சசிகலா, அதிமுகவில் ரீஎன்ட்ரி கொடுப்பதாக தெரிவித்து பரபரப்பை கிளப்பி உள்ளார். இதன் தொடர்ச்சியாக தான் ஓ பன்னீர் செல்வம் தரப்பு ஜுன் 20ல் ஆலோசனை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications