எல்லாருமே மாவட்ட செயலாளர்தான்! எடப்பாடி கோட்டையில் கேட் போட்ட ஓபிஎஸ்! பரபர பட்டியலால் ஷாக் ர.ர.க்கள்!
சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செயலாளர் இருக்கும் மாவட்டங்களை ஏற்கனவே பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சேலம் மாவட்டத்தை ஐந்து மாவட்டங்களாக நிர்வாக ரீதியாக பிரிப்பதாக கூறி புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்துள்ளதால் சேலம் தரப்பு அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, பல அரசியல் கட்ட நகர்வுகளை ஓபிஎஸ் மேற்கொண்டு வருகிறார்.
அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை கட்சியிலிருந்து நீக்கும் அதிரடி முடிவுகளையும் எடப்பாடி பழனிச்சாமி அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறார். அதே நேரத்தில் இதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்த கட்ட நகர்வுகளை நோக்கி செல்கிறார் ஓபிஎஸ்.

ஓ.பன்னீர்செல்வம்
கடந்த சில மாதங்களாகவே ஓபிஎஸ் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், சார்பு நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த நிலையில், புதிதாக மாவட்ட செயலாளர்களையும் தலைமைக் கழக நிர்வாகிகளையும் ஓபிஎஸ் நியமித்து வருகிறார். குறிப்பாக பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த நிர்வாகிகள் நியமனம் சூடு பிடித்து வருகிறது.

அதிமுக மாவட்டங்கள் பிரிப்பு
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு புதிதாக 14 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுகவில் நிர்வாக ரீதியாக இருக்கும் மாவட்டங்களை புதிதாக பிரித்து பதவிகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் திண்டுக்கல் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் ஏற்கனவே பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி சேலம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு அதிரடி காட்டி இருக்கிறார் ஓபிஎஸ்.

மீண்டும் அதிரடி
அந்த வகையில், ஒரே மாவட்டமாக இருந்த கள்ளக்குறிச்சி தெற்கு வடக்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது தெற்கு மாவட்ட செயலாளராக வேங்கையனும், வடக்கு மாவட்ட செயலாளராக பாஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இடைக்கால பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலம், சேலம் மாநகர் சேலம் புறநகர் என இரு மாவட்டங்களாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தை சேலம் மாநகர், சேலம் புறநகர் மேற்கு, சேலம் புறநகர் கிழக்கு, சேலம் புறநகர் மத்திய, சேலம் புறநகர் வடக்கு என ஐந்து மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

எடப்பாடி டீம் அதிர்ச்சி
அந்த அறிக்கையின் படி, மாநகர் மாவட்ட செயலாளராக தினேஷ், புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி, சேலம் புறநகர் மத்திய மாவட்ட செயலாளராக ஜெய்சங்கர், சேலம் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக ராஜ்குமார் ,ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஓ பன்னீர்செல்வம் அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் நிர்வாகிகளை ஓபிஎஸ் பிரித்தது போல அதிமுகவை புதிய நிர்வாக மாவட்டங்களாக பிரித்து தங்களுக்கும் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டத்தையே 5 மாவட்டங்களாக பிரித்து நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications