கிளம்பி வாங்க.. தேதி குறித்த ஓபிஎஸ்.. எடப்பாடிக்கு ‘செக்’ பிளான்.. மா.செக்கள் கூட்டத்திற்கு அழைப்பு!
சென்னை: சென்னையில் வரும் ஜூலை 1ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது.
அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டிற்குச் சென்றதால் அதிமுகவை கைப்பற்ற முடியாமல் போன ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கேற்ப சமீபத்தில் டிடிவி தினகரனும், ஓ. பன்னீர்செல்வமும் சென்னையில் சந்தித்துப் பேசினர்.

அதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டு திருமண நிகழ்வில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ்ஸும் கூடுதல் நெருக்கம் காட்டினர். ஓபிஎஸ் விரைவில் சசிகலாவையும் சந்திப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ் அணியினர் விரைவில் கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்திய நிலையில் அடுத்தகட்டமாக கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், மேற்கு மண்டல மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் இன்று சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, வரும் ஜூலை 1ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தலைமையில், சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் 01-07-2023 சனிக்கிழமை காலை 10.31 மணிக்கு நடைபெறும்.
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications