எடப்பாடி பேரை சொன்னது ஒரே ஒருத்தர்தான்.. ஓப்பனாக போட்டு உடைத்த ஓ.பன்னீர்செல்வம்.. யார் அவர்?
சென்னை : யாரும் இவர்தான் ஒற்றைத் தலைமையாக வேண்டும் எனச் சொல்லவில்லை. ஒரே ஒருவர் மட்டும் எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என்று சொன்னார் என போட்டு உடைத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுகவில் சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஒலித்த ஒற்றைத் தலைமை முழக்கத்தைத் தொடர்ந்து, ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது குறித்து விளக்கியுள்ளார்.

ஒற்றைத் தலைமை
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகி உள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தனித்தனியாக போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில் இன்று தந்தி செய்தித் தொலைக்காட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதன் விவரம் வருமாறு:

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
ஒற்றைத் தலைமை வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து 14 பேர் கொண்ட குழுவை அமைத்து முடிவு செய்யலாம் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. உள்ளே நடந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது என நான் உத்தரவிட்டும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியில் வந்து சொல்லி, விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளார். வெளியே சொன்னது தவறு.

ஏன் பிரஸ் மீட்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவாதம் பொதுவில் எழுந்த பிறகு இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு இது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இப்போதைய எனது நிலைப்பாட்டை தொண்டர்களுக்குத் தெரிவித்து, குழப்பங்களை தீர்க்க வேண்டும் என்றுதான் நான் பத்திரிகையாளர்களைச் சந்தித்தேன். தொண்டர்கள் நலன் கருதியே நான் வெளிப்படையாக பேட்டி அளித்தேன்.

ஒரே ஒருவர்
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மற்றவர்கள் எல்லாம், யாருடைய மனமும் நோகாதவாறு ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்கள். யாரும் இவர்தான் ஒற்றைத் தலைமையாக வேண்டும் எனச் சொல்லவில்லை. ஒரே ஒருவர் மட்டும் எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என்று சொன்னார். அவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

அதிகாரம் இல்லை
அதிமுகவை பொறுத்தவரை, உச்ச பட்ச பதவியில் இருப்பவரை நியமனம் செய்யும் அதிகாரம் மாவட்ட செயலாளர்களுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும் இல்லை. கருத்துச் சொல்வதாக இருந்தாலும் கூட இப்போது இது தேவையற்றது. இது கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தும். இது பொதுவில் விவாதிக்கப்பட வேண்டியது அல்ல." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications