யூ டூ ப்ரூடஸ்! பன்னீரிடம் இருந்து கரும்பு மனிதரிடம் பறந்த “தேனீக்கள்” இனி அவ்ளோதானா? சொந்த ஊரிலேயே..
சென்னை: ஜூலை 11 ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுகவின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்து வரும் நிலையில் அவரது சொந்த மாவட்ட நிர்வாகிகளே எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்ற உத்தரவுடன் கடந்த 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது.
கூட்டத்தில் பேசிய அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார் எனவும் கூறினார். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு முடிவுக்கு வந்தது.

ஓபிஎஸ் நகர்வு
இதன் தொடர்ச்சியாக 11 ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் தரப்பு தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தது. 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற உத்தரவை எடப்பாடி பழனிசாமி தரப்பு மீறியதாக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை வந்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்த நிலையில், உயர்நீதிமன்றம் கடந்த 23 ஆம் தேதி பிறப்பித்த புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தன்பர். சென்னை உயர்நீதிமன்றமும், முன்னதாக தடை விதிக்க மறுத்ததுடன் ஒருநபர் அமர்வுதான் முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கையெழுத்து சர்ச்சை
இந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் எடப்பாடி பழனிசாமி தரப்பால் எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும் என்ற வாதத்தை கையில் எடுத்துது ஓ.பன்னீர்செல்வம் ஆதவாளர்கள் பேசி வந்தனர். இந்த நிலையில் பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

11 ஆம் தேதி தீர்ப்பு
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? பொதுக்குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்க இபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நேற்று வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழு நடைபெறும் நாளான 11 ஆம் தேதி காலை தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தது.

தேனி மாவட்ட நிர்வாகிகள்
அடுத்தக்கட்ட நகர்வு குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி அதிமுக நிர்வாகிகள் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள 62 பொதுக்குழு உறுப்பினர்கள் 42 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்துள்ளனர். அதேபோல் ஓபிஎஸ்-இன் சொந்த தொகுதியான போடிநாயக்கனூர் அதிமுக நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications