கலங்கிப்போன ஓபிஎஸ்.. அடுத்தடுத்து சோக நிகழ்வுகள்; பன்னீர் செல்வம் குடும்பத்தில் 6 மாதங்களில் 3 மரணம்
சென்னை: முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் இன்று காலமானார்.
Recommended Video
ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தில், அடுத்தடுத்து சோக நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஏப்ரல், மே மாதங்கள், அதன் பிறகு இப்போது செப்டம்பர் மாதம் மூன்றாவது சோக நிகழ்ச்சியை எதிர்கொண்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் மரணம் - தலைவர்கள் இரங்கல்
ஓபிஎஸ் மனைவி
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று காலை, மாரடைப்பால் காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த சில நாட்களாக, அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு, இன்று காலமானார். ஓ.பன்னீர் செல்வத்திற்கு உறுதுணையாக பல கால கட்டங்களில் இருந்து வந்தவர் அவரது மனைவி விஜயலட்சுமி. மூன்றுமுறை முதல்வராகவும் ஒருமுறை துணை முதல்வராக பதவி வகித்த போது அவருக்கு பக்க பலமாக இருந்தார்.
இரங்கல்கள்
விஜயலட்சுமி மறைவு ஓ.பன்னீர் செல்வம், அவர்களது மகன் ஓ.ரவீந்திரநாத் ஆகியோருக்கும் குடும்பத்தாருக்கும், அதிமுக கட்சியினருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஓ பன்னீர்செல்வம் மனைவியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
ஓபிஎஸ் மாமியார்
விஜயலட்சுமியின் தாயார் வள்ளியம்மாள் கடந்த ஏப்ரல் மாதம்தான் மரணமடைந்தார். இதுகுறித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விடுத்த இரங்கல் அறிக்கையில், 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், அருமை சகோதரர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அன்பு மாமியார் மதிப்பிற்குரிய திருமதி அ.வள்ளியம்மாள் அவர்கள் 7.4.2021 அன்று இரவு இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வேதனைப்படுகிறேன். ஓபிஎஸ்க்கும் அவரது மனைவிக்கும் முதல்வர் ஈபிஎஸ் ஆறுதல்
அன்புச் சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் தாயாரை இழந்து வாடும் அன்புச் சகோதரி திருமதி விஜயலட்சுமி பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினர், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் என் சார்பிலும், கழக உடன்பிறப்புக்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
ஓபிஎஸ் தம்பி
அந்த சோகம் மறைவதற்குள், அதற்கு அடுத்த மாதம், அதாவது, மே மாதம், ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகன் கடந்த மே மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் மூன்றாவது சகோதரர்தான், ஓ.பாலமுருகன். இவரது மனைவி லதா. இவர் குடும்பத்துடன் தேனிமாவட்டம் பெரிய குளம் வடக்கு அக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்தார். ஓ.பாலமுருகன் விவசாயம் மப்பும் பால்பண்ணை நடத்தி வந்தார். ஓ.பாலமுருகன் 2 ஆண்டுகளுக்கு முன்பு இதயநோயால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் சென்னை, மதுரை நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி, மே மாதம் உயிரிழந்தார்.
அடுத்தடுத்த சோகம்
இந்த நிலையில் இன்று ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி உடல் நலக்குறைவினால் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சோக சம்பவங்களால், ஓ.பன்னீர்செல்வம் மனதளவில் மிகுந்த சோர்வடைந்து உள்ளார். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று சொல்வார்கள், சம்சாரம் போனால் சகலமும் போச்சு என சொல்வார்கள். ஆனால், இப்படியான அடுத்தடுத்த சோகங்களையே, ஓபிஎஸ் எதிர்கொண்டு நிற்கிறார். இதனால், அவரது குடும்பத்தாரும் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.