போர்க்களமான சட்டசபை.. எடப்பாடி அருகே ஓ.பன்னீர்செல்வம்! அதிமுக உறுப்பினர்கள் கூச்சல்!
சென்னை: சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அருகே ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதால் அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
கேள்வி நேரத்தை அனுமதிக்க முடியாது என பெருங்குரல் எடுத்து கத்திய அதிமுக உறுப்பினர்களை சபாநாயகர் எவ்வளவோ சமாதானம் செய்தும் அவர்கள் அதை ஏற்கவில்லை.
அதிமுக உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.
புயலென நுழைந்த எடப்பாடி பழனிசாமி.. சட்டசபை கூட்டம் தொடங்கியது.. எதிர்க்கட்சி துணை தலைவர் யார்..?
சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் 2-வது நாள் கூட்டம் திருக்குறளுடன் காலை 10 மணிக்கு தொடங்கியது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமரவைக்கப்பட்டதை கண்ட அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிசாமி அருகே ஓ.பன்னீர்செல்வத்துக்கு எப்படி இருக்கை ஒதுக்கலாம் எனக் கேட்டு கூச்சலிட்டனர். கேள்வி நேரத்தை அனுமதிக்க முடியாது என பெருங்குரல் எடுத்து கத்தினர்.
சமாதானம் செய்த அப்பாவு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும், முடிந்தவரை சமாதானம் செய்து பார்த்தார் சபாநாயகர் அப்பாவு. ஆனால் அதனை அவர்கள் ஏற்க மறுத்து பிடிவாதம் பிடித்தனர். இதனால் டென்ஷனான சபாநாயகர் அப்பாவு நீங்க கலகம் செய்ய வேண்டும் என்ற முடிவோடு வந்திருக்கிறீர்கள் என்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை.
அதிமுகவுக்கு பயம்
இதனால் ஒரு கட்டத்தில் டென்ஷனான அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் அதிமுக உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இதையடுத்து அவைக்காவலர்கள் மூலம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர். இந்த நிகழ்வால் தமிழக சட்டசபையில் அசாதாரண சூழல் நிலவியது. அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை கண்டு அதிமுக பயந்துவிட்டதாகவும் அதனால் தான் வெளிநடப்பு செய்ய திட்டமிட்டு கூட்டல் குழப்பம் எழுப்புவதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
கெத்தாக ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக உறுப்பினர்களின் அமளி துமளிக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் மிகவும் கூலாக அமர்ந்திருந்தார். எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூச்சல் குழப்பத்துக்கு அஞ்சாமல் தனது முடிவில் மிகவும் திடமாக நின்றார் சாபாநயகர் அப்பாவு.