எரிகிற நெருப்பில் எண்ணெய்.. டோல்கேட் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.. ஓபிஎஸ் வைத்த கோரிக்கை!
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றவேண்டாம் என கண்டனம் தெரிவித்துள்ளார் ஓபிஎஸ்.
சென்னை : சுங்கக் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்து விலைவாசி உயர்வில் இருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை தமிழ்நாடு அரசு அளிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்த தேசிய நெடுஞ்சாலை திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 600 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு முறை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்திக்கொண்டே வருகிறது. இந்தியாவிலேயே சுங்கச்சாவடிகள் அதிகம் இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையில், இதில் பெரும்பாலான சுங்கச்சாவடிகள் அதன் கால அளவைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், அவைகள் மூடப்பட வேண்டும்.
பொதுமக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 1.4.2023 முதல் உயர்த்தப்படவிருக்கும் சுங்கக் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்து விலைவாசி உயர்வில் இருந்து மக்களைக் காப்பாற்றவும், தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை தமிழ்நாடு அரசு அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications