காவி வேட்டியில் ஓ.பன்னீர்செல்வம்! சாமியார் தோற்றத்தில் சட்டசபைக்கு வருகை! கட்சி வேட்டி என்னாச்சு?
சென்னை: இன்று நடைபெற்ற சட்டசபை சிறப்புக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ள வந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சி கரை வேட்டிக்கு பதில் காவி வேட்டி கட்டிக்கொண்டு சாமியார் தோற்றத்தில் சட்டசபைக்கு வந்திருந்தார்.
ஆனால் அவருடன் சட்டசபைக்கு வந்திருந்த அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான உசிலம்பட்டி மகேந்திரன், ஒரத்தநாடு வைத்திலிங்கம், ஆலங்குளம் மனோஜ் பாண்டியன் ஆகியோர் எப்போதும் போல் அதிமுக கரை வேட்டியை அணிந்து வந்திருந்தனர்.

அதிமுகவின் சின்னம், கொடி, பெயர் உள்ளிட்டவைகளை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு சென்றிருக்கிறது. இந்நிலையில் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பெற்ற சட்டமுன்வடிவுகளை மீண்டும் சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்து நிறைவேற்றிடும் விதமாக சட்டசபை சிறப்புக் கூட்டத் தொடர் இன்று அவசரமாக கூட்டப்பட்டது.
அதில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், வழக்கமாக கட்டும் அதிமுக கட்சி கரை வேட்டியை தவிர்த்துவிட்டு காவி வேட்டி கட்டிக்கொண்டு சட்டசபை வந்திருந்தார். நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை மீறினால் தேவையற்ற சிக்கல்கள் உருவாகலாம் என்பதால் தான் ஓ.பி.எஸ். காவி வேட்டியை தேர்வு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கரை வேட்டி கட்ட முடியாமல் செய்ததை பார்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பூரிப்புடன் இருந்ததை பார்க்க முடிந்தது.
ஓ.பன்னீர்செல்வம் காவி வேட்டி கட்டிக்கொண்டு சட்டசபைக்கு வருவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே பல முறை இதே போல் காவி வேட்டியுடன் அவர் சபை நிகழ்வுகளில் பங்கேற்ற வரலாறு உண்டு. ஓ.பன்னீர்செல்வம் ஆன்மிக காரணங்களுக்காக தான் அதிமுக கரை வேட்டியை தவிர்த்து காவி வேட்டிக் கட்டிக்கொண்டு வந்தார் என்றும் மற்றபடி வேறு எந்தக் காரணமும் இல்லை எனவும் அவரது தரப்பு சமாளித்து வருகிறது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மூலம் தனக்கு கட்சிக்கொடி, சின்ன விவகாரத்தில் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை உடைப்பதற்கான முயற்சிகளில் ஓ.பன்னீர்செல்வம் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications