ஜெயலலிதாவுக்கே விபூதி அடித்திருப்பார் இபிஎஸ்..தர்மயுத்தம் செய்ய இதுதான் காரணம்..கோவை செல்வராஜ் பரபர!
தேனி: அதிமுக இணைப்புக்காக ஓ பன்னீர் செல்வம் விடுத்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கடுமையான குற்றச்சாட்டுகளை இபிஎஸ் மீது முன்வைத்துள்ளார்.
Recommended Video
சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தது. அந்தத் தீர்ப்பில் அதிமுகவில் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத்தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், மீண்டும் அதிமுக ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் ஓபிஎஸ் விடுத்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக நிராகரித்தார். அதுமட்டுமல்லாமல் பொதுக்குழுவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தேனியில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே ஓபிஎஸ் - சசிகலா - டிடிவி தினகரன் ஆகியோர் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அமைதியாக இருந்து வரும் சூழலில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து பல்வேறு கருத்துக்களை பேசி வருகின்றனர்.

இபிஎஸ் மீது விமர்சனம்
அந்த வகையில் தேனியில் செய்தியாளர்களை சந்தித்து கோவை செல்வராஜ் கூறுகையில், அதிமுக இணைப்பு குறித்து ஓபிஎஸ் விடுத்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக நிராகரித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி இதுவரை கட்சிக்காக எதையும் செய்ததில்லை. சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்ட பின் மட்டுமே, அவர் பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது.
2014ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறை சென்ற போது, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அமர வைத்திருந்தால், ஜெயலலிதாவுக்கு எதிராகவே துரோகம் செய்திருப்பார். ஆனால் ஓ.பன்னீர் செல்வம் அப்படியல்ல. எல்லாவற்றையும் மறந்துவிட்டு, கட்சிக்காக பேசுபவரை விமர்சிக்கின்றனர்.

இன்னும் சில நாட்கள்
எடப்பாடி பழனிசாமியோடு இருக்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இணைய வேண்டும் என்றே பேசி வருகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இன்னும் ஓரிரு நாட்களில் ஓபிஎஸ் பக்கம் வருவார்கள். அது விரைவில் நடக்கும்.

தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து யாரும் எதையும் எடுத்துச் செல்லவில்லை. ஒரு வார காலமாக சசிகலா அலுவலகம் வருவார் என்று பீதியில், வெளியாட்களை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்க வைத்தனர். அதேபோல் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக பல்வேறு நடவடிக்கையில் செயல்பட்டுள்ளார். சில முன்னாள் அமைச்சர்களை வைத்துக் கொண்டு மூத்த நிர்வாகிகளுக்கு பதவி தருகிறேன் என்று பேசி, கட்சியில் குழப்பம் ஏற்படுத்துகின்றனர்.

தர்மயுத்தம்
ஒற்றைத் தலைமையை தொண்டர்கள் விரும்புவதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அப்படியெல்லாம் எந்த தொண்டர்களும் சொல்லவில்லை. அதேபோல் டிடிவி தினகரன், சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தவில்லை. ஜெயலலிதாவின் மறைவு குறித்து உண்மை தெரிய வேண்டும் என்றே தர்மயுத்தத்தில் ஓபிஎஸ் ஈடுபட்டார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications