இக்கட்டான சூழ்நிலை.. நேரடியாக "அவங்களுக்கே" போனை போட்ட ஓபிஎஸ்.. பரபரப்பு மூவ்.. என்ன ஆகும்?
சென்னை: அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் 6ஆவது நாளாகத் தொடரும் நிலையில், ஓ. பன்னீர்செல்வம் முக்கிய நடவடிக்கையில் இறங்கி உள்ளார்.
கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னரே அதிமுகவில் மாற்றங்கள் வரும் எனக் கூறப்பட்டது. இருந்த போதிலும் அப்போது எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதிமுக மோசமான தோல்வியை அடைந்தது. அதன் வாக்கு வங்கியும் சரிந்தது.

அதிமுக
இதனால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டு இருந்தது. குறிப்பாக, ஒ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே மோதல்கள் இருந்து வருவதாகத் தகவல் கூறப்பட்டது. இது குறித்து அக்கட்சி சார்பில் எதுவும் கூறப்படவில்லை என்றாலும் கூட இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடர்ந்தே உள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாகக் கூறப்பட்டது.

பொதுக்குழு
இப்படியொரு சூழலில் தான் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே பொதுக்குழுவில் கொண்டு வரப்பட வேண்டிய தீர்மானம் குறித்து விவாதிக்கக் கடந்த வாரம் தீர்மானக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அங்கே தான் சிலர் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்றும் எடப்பாடியை பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி உள்ளனர். எடப்பாடி ஆதரவாளர்களே இந்த கோரிக்கையை எழுப்பியதாகத் தெரிகிறது.

ஓபிஎஸ்
இதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பிறகு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் உடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வேறு ஒருவரை அப்பதவிக்குக் கொண்டு வருவது ஜெயலலிதாகவுக்கு செய்யும் துரோகம் என்று விமர்சித்தார்.

ஆலோசனை
அதன் பின்னரும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தங்கள் ஆதரவாளர்கள் உடன் தனித்தனியாகவே ஆலோசனை நடத்தி வந்தனர். ஒற்றை தலைமை குறித்துத் தானோ எடப்பாடியோ பேசவில்லை என்றும் இது குறித்து எடப்பாடியை நேரில் சந்தித்தும் ஆலோசிக்கத் தயாராக உள்ளதாக ஓபிஎஸ் குறிப்பிட்டார். இருந்த போதிலும், எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் தொடர்ந்து அமைதி காத்தே வந்தார்.

மூத்த தலைவர்கள்
இந்தச் சூழலில் தான் கடந்த இரு நாட்களாக செங்கோட்டையன், தம்பிதுரை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸை மாற்றி மாற்றிச் சந்தித்து வந்தனர். அவர்கள் ஓபிஎஸை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்த முறை எதிலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்பதில் ஓ. பன்னீர்செல்வம் உறுதியாக உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

விளம்பரம்
மேலும், கடந்த காலங்களைப் போல இல்லாமல் பணத்தைச் செலவழிக்கவும் ஓபிஎஸ் தயாராக உள்ளதாகவே அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே இன்றைய தினம் பல முன்னணி நாளிதழ்களில் ஓபிஎஸ் குறித்து முழு பக்க விளம்பரங்கள் வெளியாகி இருந்தன. மேலும், அதில் சசிகலா குறித்து எவ்வித கருத்தும் இல்லாத நிலையில், தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடியை விமர்சிக்கும் வகையிலும் சில கருத்துகள் இருந்தன.

அவர்களிடம் பேசிய ஓபிஎஸ்
இது மட்டுமின்றி மாவட்டச் செயலாளர்களையும் நேரில் சந்தித்து அவர்களிடமும் ஆதரவு கோர பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக வட மாவட்டங்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான மாவட்டச் செயலாளர்கள் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர்களையும் பன்னீர்செல்வம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். கட்சியைக் காக்க அனைவரும் தன் பக்கம் வர வேண்டும் என்ற ரீதியிலும் அவர் பேசி இருந்தார்.

அடுத்து என்ன
அதேபோல தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் ஓபிஎஸ் அழைப்பை ஏற்றதாகவே தெரிகிறது. அவர்கள் பலர் சென்னையில் வந்துள்ள நிலையில், அவர்களைத் தனியார் ஹோட்டல் ஒன்றில் வைத்து எடப்பாடி பழனிசாமி விரைவில் சந்தித்துப் பேச உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் விரைவில் ஒரு முடிவு எட்டப்படும் என்ற கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications