ஓபிஎஸ் டூ கெஜ்ரிவால்.. யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களே.. வாழ்க்கை வட்டம் சார்.. ட்விஸ்ட்
சென்னை: யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களோ, அவர்களே பின்னாளில் எதிர்த்தவர்களின் பாதுகாப்பில் அரசியல் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் பல்வேறு அரசியல்வாதிகளையும் சொல்லலாம் என்றாலும், வைகோ, ஓபிஎஸ், அரவிந்த் கெஜ்ரிவால், என மூன்று பேர் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்பது போல் தேர்தல் நேரத்தில் கூட்டணி மாற்றம் நடைபெறும்.அது இயற்கையான ஒன்று என்ற தோற்றத்தை அரசியல்வாதிகள் மக்களுக்கு பழக்கப்படுத்தி விட்டார்கள் .. பல நாட்கள் அரசியல் கட்சி தலைவர்களை கடுமையாகவும், இன்னும் சொல்லப்போனால் கேவலமாகவும், மிகவும் தரைக்குறைவாகவும் விமர்சித்துவிட்டு , பின்னர் அவர்களுடன் கொஞ்சி குலாவி கூட்டணிஅமைப்பது நமது நாட்டில் சர்வ சாதாரணம். அது எந்த கட்சியாக இருந்தாலும் நிச்சயம் பொருந்தும். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை.. நிரந்த எதிரியும் இல்லை என்ற வாக்கியம் பல ஆண்டுகளாக தொடர்கிறது..

மத்தியில் நேர் எதிர் துருவங்களாக பாஜக-காங்கிரஸ் இருக்கிறது என்றால், மாநிலத்தில் திமுக-அதிமுகஇருக்கிறது. அதிமுகவில் இருந்து திமுகவிற்கு தாவுவது, திமுகவில் இருந்து அதிமுகவிற்கு தாவுவது, காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவுவது. பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவுவது என இதெல்லாம் அரசியலில் சர்வ சாதாரணம்..
அதனை மற்ற கட்சிகளை பொறுத்தவரை சில காலம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருப்பார்கள்.. சில காலம் பாஜக உடன் கூட்டணியில் இருப்பார்கள்... சில காலம் திமுகவுடனும், சில காலம் அதிமுக உடனும் கூட்டணியில் இருப்பார்கள்.. இதெல்லாம் இயல்பாகிவிட்டது.
ஆனால் யாரை எதிர்த்து தனது அரசியலை ஆரம்பித்தார்களோ.. யாருக்கு எதிராக கொள்கை அரசியலாக முன்னெடுத்தார்களோ.. பின்னாளில் அவர்களுடனே சேர்ந்து பயணிக்க வேண்டிய நிலைக்கு பல அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் தள்ளப்பட்டுள்ளன..
உதாரணத்திற்கு வைகோ வாரிசு அரசியல் என்று சொல்லி ஸ்டாலினுக்கு எதிராக வெளியேறித்தான் மதிமுகவை தொடங்கினார்.. பின்னாளில் அவருடன் கூட்டடணி அமைத்து அவரை முதல்வராக்குவதே சபதம் என்ற நிலைக்கு வந்தார்,. அரசியல் நிலைப்பாட்டை அப்படியே மாற்றிக்கொண்டார்.
அதேபோல் ஓ பன்னீர்செல்வத்தை எடுத்துக்கொண்டால், டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவால் அதிமுகவில் முக்கிய இடத்தை பிடித்தார். முதல்வர் பதவி விவகாரத்தில் பிரச்சனை வந்த போது, சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று தர்ம யுத்தமே தொடங்கினார். ஆனால் இப்போது அதே டிடிவி தினகரன் மற்றும் சசிகலா உடன் அரசியலில் கூட்டணியாக அமைத்து தற்போது பயணிக்கிறார்.
அடுத்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.. அரவிந்த் கெஜ்ரிவாலை பொறுத்தவரை 2013ம் ஆண்டு காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் கட்சி என்று அண்ணா ஹாசாரே உடன் போராட்டத்தில் பங்கேற்று, காங்கிரஸ் மீது பெரிய அளவில் ஊழல் புகார் கூறி, அக்கட்சியை மொத்தமாக அகற்ற வேண்டும் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்.. காங்கிரஸ் கட்சியை டெல்லியில் பெரிய அளவில் காலி செய்தார்... ஆனால் அடுத்ததாக பாஜகவின் வாக்கு வங்கியையும் பெரிய அளவில் அசைத்தும் பார்த்தார். இப்போது ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து பயணிக்க தொடங்கி உள்ளார். ஊழல், பிரச்சனை என காங்கிரஸ் கட்சியை கடுமையான விமர்சித்த பல கட்சிகள் ஒன்றாக சேர்ந்து பயணித்து பாஜகவிற்கு எதிராக களம் இறங்கி உள்ளன. அதேநேரம் பாஜக கூட்டணியிலுமே , அந்த கட்சியை ஊழல் புகாரில் கடுமையாக பேசிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் அரசியலில் இதெல்லாம் சாதாரணம்ப்பா என்று கவுண்டமணி சொல்வாரே அதுதான் நிஜம்..












Click it and Unblock the Notifications