நாங்கள் பணியாளர்களா? அப்போ டாக்டரை மருத்துவ பணியாளர்னு அழைக்கலாமா? செயல்முறை மருத்துவர்கள் வேதனை
சென்னை: செயல்முறை மருத்துவர்களை (occupational Therapists) அந்த துறையின் பெயரை வைத்து அழைக்காமல் இருப்பது அத்துறைக்கு செய்யும் அநீதி என அத்துறை மருத்துவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செயல்முறை மருத்துவர் கார்த்திக் மணி என்பவர் ஒன் இந்தியாவுக்கு அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2021-ம் ஆண்டு துணை மருத்துவம் மற்றும் மருத்துவ நலம் சார்ந்த தொழில்களுக்கான தேசிய ஆணையச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி ஒவ்வொரு மாநிலமும் மாநில அளவில் ஆணையம் அமைக்க வேண்டும். அதன்படி தமிழகத்தில் வரவிருக்கும் ஆணையத்திற்கான விதிகள் கடந்த டிசம்பர் 15, 2023 அன்று வெளியிடப்பட்டுள்ளன.

அதில் செயல்முறை மருத்துவர்களை "தொழில்சார் நோய்களுக்கான சிகிச்சையில் தொழில்முறைப் பணியாளர்" என்று தவறாகவும்
தரக்குறைவாகவும் குறிப்பிட்டுள்ளனர். இது இத்துறைக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும்.
செயல்முறை மருத்துவர்கள் "தொழில்சார் நோய்களுக்கான" (occupational diseases) சிகிச்சை அளிப்பவர்கள் என்ற தவறான கருத்தியலை இது ஏற்படுத்திவிடும். ஒரு நோயினாலோ, விபத்தினாலோ அல்லது பிறவிக் குறைபாட்டினாலோ ஒருவரது செயல்திறன் பாதிக்கப்படும்போது, அதை ஆராய்ந்து, அவர்களுக்கு சிகிச்சையளித்து, மீண்டும் திறம்பட செயலாற்ற வைப்பவர்களே செயல்முறை மருத்துவர்கள்.
"Occupational therapy" என்பதில் உள்ள "occupation" என்ற வார்த்தை தொழிலை குறிப்பதன்று.
அது நாம் அன்றாடம் செய்யும்"செயல்களை" குறிப்பதாகும். இந்தப் புரிதலின்றி, சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களை ஆலோசிக்காமல் இவ்வாறு அச்சிடப்பட்டுள்ளது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியதாகும். மேலும் பணியாளர் என்ற வார்த்தை "worker" அல்லது "technician" என்ற அளவிலேயே பொதுமக்களால் புரிந்து கொள்ளப்படும்.
ஒருவர் செயல்முறை மருத்துவராக குறைந்தது 4 ½ ஆண்டுகள் படித்து BOT எனப்படும் இளங்கலைப் பட்டம் பெற வேண்டும். முதுகலை பட்டம் பெற இன்னும் 2-3 ஆண்டுகள் படிக்க வேண்டும். இவ்வாறிருக்க அவர்களை பணியாளர்கள் என்றழைப்பது அவர்களை அவமதிப்பதாகும். எந்தப் பணி செய்பவர்களும் பணியாளர்களே எனில் மருத்துவப்பணி செய்பவர்களை நாம் மருத்துவப் பணியாளர் என்று அழைத்தால் ஏற்றுக்கொள்வார்களா?
அவர்களை நாம் மருத்துவர்கள் என்றுதானே அழைக்கிறோம். அதேபோல் செயல்முறை மருத்துவத்துறையின் தத்துவங்களை, கோட்பாடுகளை, ஆய்வு முறைகளை, சிகிச்சை முறைகளை மருத்துவப் பின்னணியுடன் பயின்று பயிற்சி மேற்கொண்டு தங்கள் துறையில் நிபுணர்களாக வெளிவருபவர்களை நாம் செயல்முறை மருத்துவர்கள் என்றுதானே அழைக்க வேண்டும்.
இவ்விதியில் ஒருவர் செயல்முறை மருத்துவராக பதிவு செய்ய ஒரு மருத்துவரிடம் இருந்து நன்னடத்தை சான்றிதழ் (character reference) பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மருத்துவத் துறையில் நிலவும் அடக்குமுறைப் போக்கை காட்டுகிறது. இதுவும் செயல்முறை
மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து இந்திய செயல்முறை மருத்துவ மதியுரையகம் (Indian Occupational Therapists Think Tank) உள்ளிட்ட அமைப்புகளும் செயல்முறை மருத்துவர்களும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் கடிதங்கள் எழுதியுள்ளனர். தங்களை கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கும் மேற்கூறிய விஷயங்களை நீக்கி விரைவில் திருத்தப்பட்ட விதிகள் வர வேண்டும் என்பதே செயல்முறை மருத்துவர்களின் கோரிக்கையாக உள்ளது. இவ்வாறு செயல்முறை மருத்துவர் கார்த்தி மணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications