கோரமண்டல் ரயில் விபத்து: தமிழக பயணிகள் 140 பேர் நிலை என்ன? அதிகாரிகள் கொடுத்த பரபர தகவல்
சென்னை: சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்தில் சிக்கியது. இந்த ரயிலில் பயணம் செய்த தமிழக பயணிகள் எத்தனை பேர் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், 140 பேரின் விவரங்கள் கிடைத்து இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - கொல்கத்தாவின் ஷாலிமார் இடையே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கபப்டுகிறது. இந்த ரயில் நேற்று மாலை ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு வழக்கம் போல் கிளம்பியது. இரவு சுமார் 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் பெங்களூரில் இருந்து கொல்கத்தா சென்ற ஒரு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியிருந்தது. அந்த ரயிலின் பெட்டிகள் ரெயிலின் சில பெட்டிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்த தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன. இதனால், அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், அந்த தண்டவாளத்தின் மீது மோதியது.
இதில் ரயில் பெட்டிகள் உருக்குலைந்து ஒன்றன் மேல் ஒன்றாக கிடந்தன. இதில் பலரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மீட்புக்குழுவினர் விரைவாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணிகள் எத்தனை பேர் என்ற விவரம் முழுமையாக கிடைக்கவில்லை. இந்த நிலையில் சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் 140 பேர் பயணித்த தகவல் கிடைத்திருப்பதாக பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராமன் கூறினார்.

இது பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராமன் கூறியதாவது:- சென்னை நோக்கி வந்த பயணிகள், தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் யார் யார் என்று பார்த்தோம். அதில் சுமார் 140 பயணிகளின் விவரம் கிடைத்தது. அவர்களை தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டதில் 90 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
10 முதல் 12 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 15 பேர் அந்த ரயிலில் ஏறவில்லை. விபத்து நடைபெற்ற ஸ்டேஷனுக்கு பிறகு உள்ள ரயில் நிலையங்களில் இருந்த இந்த பயணிகள் ரயிலில் ஏறவில்லை. சில பேரின் செல்போன்கள் ஸ்விட்ச் ஆப்பில் உள்ளது. இது முதல் கட்ட பணிதான்" என்றார்.












Click it and Unblock the Notifications