EXCLUSIVE: பலி 200ஐ தாண்டலாம்.. ரயில் விபத்தில் சிக்கிய தஞ்சாவூர் ராணுவ வீரரின் பதைபதைக்கும் பேட்டி
சென்னை: கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் 200க்கும் அதிகமான பயணிகள் உயிரிழந்து இருக்கலாம் என்று அந்த ரயிலில் பயணித்த தஞ்சாவூரை சேர்ந்த ராணுவ வீரர் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டு இருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசேர் அருகே சரக்கு ரயில் மற்றும் டெல்லி துரந்தோ ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதுவரை வெளியான தகவலின்படி 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து இருக்கின்றன.

மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்தவர்களில் தஞ்சாவூரை சேர்ந்த வெங்கடேஷ் என்ற ராணுவ வீரரும் ஒருவர். இவர் ரயில் விபத்து தொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு தொலைபேசி வாயிலாக விளக்கமளித்து இருக்கிறார்.
அவர் பேசுகையில், "கோரமண்டல் ரயில் பாலசேரை தாண்டி வந்துகொண்டு இருக்கும்போது எதிரே துரந்தோ ரயில் வந்தது. அது டெல்லியில் இருந்து வந்தது என்று நினைக்கிறேன். அப்போது 2 ரயில்கள் வந்த தண்டவாலத்துக்கும் இடையே சரக்கு ரயில் வந்துவிட்டது. அந்த சரக்கு ரயில் துரந்தோ ரயிலின் எஞ்சினுக்கு அருகே உள்ள பெட்டியின் மீது மோதியது.
சரக்கு ரயில் கோரமண்டல் ரயில் மீது இடிக்கவில்லை. கோரமண்டல்தான் துரந்தோ மீது இடித்துவிட்டது. பல பேர் காயமடைந்து இருக்கிறார்கள். இறந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். பலி எண்ணிக்கை 200க்கு மேல் இருக்கும். நான் பயணித்த ரயில் பெட்டி விபத்தில் சிக்கவில்லை. 7 பெட்டிகளுக்கும் மேல் தடம் புரண்டு உள்ளது. சுமார் 10 பெட்டிகள் தடம்புரண்டு இருக்கும்.
நான் இந்திய ராணுவத்தில் சிப்பாயாக இருக்கிறேன். தற்போது விடுமுறைக்காக ஊருக்கு சென்றுகொண்டு இருந்தேன். அப்போது இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துவிட்டது. நானும் ராணுவத்தில் மீட்புப் படையில்தான் இருக்கிறேன். விபத்து ஏற்பட்டவுடன் எனது கமாண்டருக்கு தகவல் தெரிவித்துவிட்டேன்.
எனது சொந்த ஊர் தஞ்சாவூர் அருகே உள்ள சிறிய கிராமம். அவ்வப்போது ஆம்புலன்ஸ் வந்துகொண்டு இருக்கின்றன. தீவிரமாக மீட்பு வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். உடல்களை அப்புறப்படுத்திக்கொண்டு உள்ளனர். மிகப்பெரிய விபத்து என்பதால் முழுமையாக முடிவடைய 2 நாட்கள் ஆகும்.
ஏனென்றால் ரயிலுக்கு உள்ளே எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. விபத்து ஏற்பட்ட இடம் காட்டுப்பகுதி அல்ல. முக்கிய சாலைதான். அப்பகுதி மக்கள் அதிக உதவிகளை செய்துகொண்டு இருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர், போலீஸ், தீயணைப்பு துறையினர், மருத்துவர்கள், வருவாய் துறையினர் என அனைவரும் இங்கு உள்ளனர்.
இவர்களுக்கு முதல் உதவிதான் தேவைப்படுகிறது. சீரியசாக இருப்பவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். நான் வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் நிரம்பி இருந்தார்கள். எதிரே வந்த ரயிலை பற்றி எனக்கு தெரியவில்லை. எனக்கே வெயிட்டிங் லிஸ்டில் இருந்துதான் சீட் கிடைத்தது. RAC இல் சீட் உறுதியானது. B6 பெட்டியில் நான் இருந்தேன். இந்த பெட்டிக்கு எதுவும் ஆகவில்லை. இது ரயிலின் நடுப்பகுதியில் இருக்கும் பெட்டி." என்றார்.












Click it and Unblock the Notifications