ஹிந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கும் தெற்கு ரயில்வே பிறப்பித்த உத்தரவு
சென்னை: தமிழகத்தில் ஹிந்தி மொழிக்கு ஒரு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகளின் மத்திய பாஜக அரசு ஹிந்தி மொழியை தமிழகத்தில் திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் தான் ‛‛தெற்கு ரயில்வே அலுவலக பணிகளில் 'ஹிந்தி' மொழி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்'' என, அனைத்து பிரிவுகளின் தலைமை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே தமிழகத்தின் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த தெற்கு ரயில்வேயில் 90,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் கணிசமான அளவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளாவை சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர்.

சமீபகாலமாக வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமானவர்கள் தெற்கு ரயில்வேயில் பணியமர்த்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் பேசாமல் ஹிந்தியில் மட்டுமே பேசுவதாகவும் புகார்கள் உள்ளன. ஹிந்தி பேசுவதால் தமிழக மக்கள் சிரமத்தை எதிர்கொள்வதாக பல இடங்களில் போராட்டங்களும் நடந்துள்ளது.
இப்படியான சூழலில் தான் தெற்கு ரயில்வேயின் அலுவலக பணிகளில், ஹிந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என, தெற்கு ரயில்வே திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே அனைத்து பிரிவுகளின் தலைமை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், ‛‛ரயில்வே அலுவலக பணிகளில், 'ஹிந்தி' மொழி பயன்பாட்டை அதிகரிக்க செப்டம்பர் 19ம் தேதி வரை சிறப்பு முன்னெடுப்புகள் எடுக்கப்பட வேண்டும். தெற்கு ரயில்வே அலுவலக பணியில் ஹிந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். பொதுமக்கள் சேவைகளில் ஆங்கிலத்துடன் ஹிந்தி மொழியும் இடம்பெற செய்ய வேண்டும். டிக்கெட் கவுன்ட்டர்கள், அலுவலக ஆவணங்கள், உள்ளறிக்கை, உத்தரவுகளில் ஹிந்தி மொழியை பயன்படுத்த வேண்டும். இதில் பெரும்பாலானோர் இந்த முன்னெடுப்பில் பங்கேற்பதை உறுதி செய்வது அவசியம் ஹிந்தி மொழி முன்னெடுப்பின் நிறைவில், மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விபரத்தை, துணை பொது மேலாளருக்கு அனுப்ப வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications