மாஸ் காட்டும் கிளாம்பாக்கம் பஸ் டெர்மினல்! எவ்வளவு பஸ்களை கையாள முடியும் தெரியுமா? வெளியான தகவல்
சென்னை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்காக உருவாக்கப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், பேருந்து நிலையத்தின் 99% கட்டுமான பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் விரைவில் திறக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த பேருந்து நிலையம் எத்தனை பேருந்துகளை கையாளும் திறன் கொண்டது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
வளர்ந்து வரும் நகரமயமாக்கல் சென்னையை நோக்கி ஏராளமான மக்களை நகர்த்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு வரும் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகை 1 கோடியை கடந்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களிலிருந்து வருகின்றனர். அதேபோல விழா நாட்களில், பண்டிகை தினங்களில் இம்மக்கள் பெரிய அளவில் சொந்த ஊரை நோக்கி படையெடுக்கின்றனர்.

ஆனால் இவர்களுக்கான முறையான போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. தாம்பரம், திருவான்மியூர் போன்ற புறநகர் பகுதிகளில் தென் மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவை குறைந்த எண்ணிக்கையில்தான் இயக்கப்படுகின்றன. எப்படி இருந்தாலும் கோயம்பேடு வந்தால்தான் பஸ் கிடைக்கும் என்கிற சூழல் இருக்கிறது. அப்படியே கோயம்பேடு வந்து பஸ் புடிச்சாலும் பெருங்களத்தூரை தாண்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
இந்த பிரச்னையை சமாளிக்கதான் வண்டலூரையடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை கட்டுவது என்று கடந்த அதிமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி 88 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ரூ.400 கோடியில் கடந்த 2019ம் ஆண்டு பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் 70-80 சதவிகிதம் முடிந்தபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிகாரிகள் மாற்றப்பட்டனர். புதிய அதிகாரிகள் இந்த பேருந்து நிலையத்தை ஆய்வு செய்ததில் ஏராளமான பிரச்னைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
குறிப்பாக மழைநீர் வடிகால் இல்லாமல் இருந்தது, பேருந்துகள் வெளியேறுவதற்கான பாதை குறுகலாக இருந்தது, பேருந்து நிலையத்தை சுற்றி டிராபிக் ஜாம் ஆகாமல் தடுக்க அப்பகுதிகளை விரிவுப்படுத்த தவறியது போன்றவை அடையாளம் காணப்பட்டன. இதனையடுத்து ஒட்டுமொத்த கட்டமைப்பையே மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும் மொத்தமாக மாற்றாமல் எவையெல்லாம் தவறவிடப்பட்டுள்ளதோ அதை மட்டும் மாற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த பணிகள் காரணமாகவும், கொரோனா தொற்று பாதிப்பு உள்ளிட்ட காரணங்களாலும் இந்த பேருந்து நிலையம் திறப்பது தாமதமாகியது. எனினும் கடந்த 2022ம் ஆண்டு இது திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி திறக்க முடியவில்லை. காரணம் இந்த பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தாமல் இருந்ததுதான். எனவே ரூ.70 கோடி செலவில் சுற்று சாலை அமைப்பது, சாலைகளை விரிவாக்கம் செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது திட்டமிடப்பட்டதை விட 25% கூடுதல் செலவாகும்.
இவ்வாறு எல்லா பணிகளும் மேற்கொள்ளப்பட்டு ஒருவழியாக அனைத்து பணிகளும் 99% நிறைவடைந்துள்ளன. எனவே விரைவில் இந்த பேருந்து நிலையம் திறப்பு தேதி அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இவ்வாறு திறக்கப்பட்டால் இந்த பேருந்து நிலையம் சுமார் 2,000 பேருந்துகள் வரை கையாளும், இது தவிர 270 கார்கள், 3,500 பைக்குகள் பார்க் செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக தென் மாவட்டங்களுக்கு அதிக அளவிலும், மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு குறைவான அளவில் பேருந்துகளும் இயக்கப்படும். அதன் பின்னர் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications