தயாரிப்பாளர் சங்கத்தை இழுத்து மூடி சீல் வைத்த அதிகாரிகள்.. அதிர்ச்சியில் திரையுலகம்!
சென்னை: திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை இன்று மாலை இழுத்து மூடி அதிகாரிகள் சீல் வைத்து விட்டனர். இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தயாரிப்பாளர் சங்கத்தில் பெரும் பூசல் வெடித்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத் தலைுவராக இருக்கும் நடிகர் விஷால் மீது ஒரு தரப்பு பல்வேறு பரபரப்பான புகார்களை வைத்துள்ளது. அவர் ரூ. 7 கோடி வரை முறைகேடு செய்து விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முன்னணி இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான குழு புகாரும் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் நேற்று திடீரென சிலர் தி.நகரில் இயங்கி வரும் தற்காலிக அலுவலகத்தைப் பூட்டி விட்டனர். இதனால் பரபரப்பு கூடியது. இந்று காலை பூட்டைத் திறக்க விஷால் வந்தார். ஆனால் அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை. ஆனால் நான் பூட்டை உடைப்பேன், உள்ளே போவேன். அதைத் தடுக்க நீங்க யாரு என்று கேட்டு கடுமையாக வாதிட்டார் விஷால்.
இதையடுத்து துணை கமிஷனர் அரவிந்தன் உத்தரவின் பேரில் விஷால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கல்யாண மண்டபத்தி்ற்கு கொண்டு போய் 8 மணி நேரம் வைத்திருந்து மாலையில்தான் போலீஸார் விடுவித்தனர். இந்த நிலையில் தற்போது அடுத்த அதிர்ச்சியாக தயாரிப்பாளர் சங்கத்தைப் பூட்டி சீல் வைத்து விட்டது தமிழக அரசு.
கிண்டி தாசில்தார் ராம்குமார் தலைமையில் வந்த அதிகாரிகள் குழு சங்க அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தது. இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பூட்டு போட்டவர்கள் மீதும் வழக்கு:
இதற்கிடையே, சங்க அலுவலகத்தைப் பூட்டி பூட்டுப் போட்டவர்கள் மீதும் போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications