பழைய ஓய்வூதியத் திட்டம்.. ஏப்ரல் 30க்குள் அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி? திமுகவுக்கு சிக்கல் -ஐபெட்டோ
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருந்தது. ஆனால் ஆட்சி நிறைவடைய இன்னும் ஒரு ஆண்டு காலமே இருக்கும் நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டி ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை பாதிக்கும் என அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் ( ஐபெட்டோ) செயலாளர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. அந்த ஆண்டிலிருந்து அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் அடிப்படையிலேயே பயன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக, திமுக ஆட்சி மாறி மாறி தமிழகத்தில் அமைந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது.

2001 சட்டமன்ற தேர்தலிலும் திமுக அந்த வாக்குறுதியை கொடுத்திருந்தது. இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகி இருக்கும் நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர வேண்டுமென அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவை குறித்து ஆராய மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அந்த குழு ஒன்பது மாதங்களில் அறிக்கை தரவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தொடர்ந்து 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில் ஏதாவது அறிவிப்பு இருக்கும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதுபோன்ற எந்த அறிவிப்பும் வராதது அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து பல அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை பாதிக்கும் என அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர்" ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் அதிகாரிகளின் ஆட்சி நடைபெறுகிறது. அதனால் தான் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டும்.
2026 ஏப்ரல் மாதத்தில் தேர்தல் வந்துவிடும் என்பதால் தமிழக முதல்வர் 6 லட்சம் பேருக்கு பழைய ஊதிய திட்டத்தத்தை கொண்டு வருவோம் என உறுதி அளிக்க வேண்டும். அது 2025 ஆம் ஆண்டிலிருந்து அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதியாக பாதிக்கும். மே மாதத்தில் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் இணைந்து ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்ததை விட வலுவான போராட்டத்தை நடத்துவோம்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications