இமாச்சலில் நடைமுறையாகும் பழைய ஓய்வூதிய திட்டம் - தமிழகத்தில் எப்போது சாத்தியமாகும்? ராமதாஸ் கேள்வி
சென்னை: இமாச்சலப் பிரதேசத்தில் புதிதாக பதவியேற்ற காங்கிரஸ் அரசு, அங்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான பழைய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் எப்போது செயல்படுத்தப்படப் போகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று முதல்வர் பதவியில் அமர்ந்த சுக்விந்தர் சிங் சுகு, மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்ற பிம்பம் தான் கட்டமைக்கப்பட்டிருந்தது.

6 மாநிங்களில் சாத்தியமாகியுள்ளது
பழைய ஓய்வூதியத் திட்டத்தை எந்த காலத்திலும் செயல்படுத்த முடியாது; பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது பேசுவதற்கு இனிப்பாக இருக்கும்; நடைமுறைப் படுத்துவதற்கு மிகவும் கசப்பானதாக இருக்கும் என்பது தான் பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் முறியடித்து ராஜஸ்தான் மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியது. அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களும் இந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது. இந்த மாநிலங்களுக்கு முன்பே மேற்கு வங்கம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இந்த பட்டியலில் 6-வது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் இணைந்துள்ளது.

தமிழகத்தின் நிலைமை
தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்பது கடந்த பல ஆண்டுகளாகவே தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வாக்குறுதி அளித்த எந்த கட்சியும் அதை செயல்படுத்துவதில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க 2016-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப் பட்ட சாந்தா ஷீலா நாயர் குழுவும் எந்த அறிக்கையும் அளிக்கவில்லை.

நடவடிக்கை எடுக்காத அதிமுக அரசு
இந்த சூழலில், கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அதன் அறிக்கையை 2018-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி சமர்ப்பித்தது. ஆனால், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

"தமிழ்நாட்டில் ஏன் செயல்படுத்த முடியாது?"
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவின் 6 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் செயல்படுத்த முடியாது? பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடுதான் நாட்டிற்கே முன்னோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்த வாய்ப்பை தமிழகம் இழந்துவிட்டது. இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், இனியாவது தாமதிக்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications