அரசு ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசு.. பத்தே நாளில் பழைய ஓய்வூதியத் திட்டம்! வெளியான சூப்பர் அப்டேட்!
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு, அரசின் கூடுதல் தலைமை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்துள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி இந்தக் குழு தனது இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பரிசாக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் ஓய்வு காலத்தில் கண்ணியத்துடனும், பிறரை எதிர்பார்க்காமல் வாழும் வகையில் ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2003 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது.
இந்த நிலையில் 2003ல் மத்திய அரசு ஓய்வூதியத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. இதை அடுத்து இந்தியா முழுவதும் புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதனால் அரசு ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்தது.

பழைய ஓய்வூதியத் திட்டம்
தமிழகத்திலும் அரசு ஊழியர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு ஊழியர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டமே அமலில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தான் நடைமுறையில் இருக்கிறது. திமுக, அதிமுக ஆட்சி மாறி மாறி அமைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு
இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து திமுக தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நான்கு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று நிறைவடைந்த போதிலும் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
ககன்தீப் சிங் பேடி
இந்நிலையில் நான்காண்டு ஆட்சி முடிந்து ஐந்தாவது ஆண்டில் திமுக பயணிக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் முதலே தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிடும் என்பதால் அதற்கு முன்னதாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் கூறியுள்ளனர். மேலும் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்தனர். இதை அடுத்து பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு, அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
அரசு ஊழியர்கள்
அந்தக் குழு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருக்கும் மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டதோடு தமிழ்நாடு அரசின் ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்களைச் சந்தித்துக் கருத்துக்களைப் பெற்றது. செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அந்தக் குழு தனது அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கும் என அறிவிக்கப்பட்டது. அந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கக் கூடுதல் அவகாசம் வழங்கக்கூடாது என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை ஏற்கப்பட்ட நிலையில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இந்தக் குழுவின் அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
தீபாவளி பரிசு
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசு ஊழியர்களின் ஆதரவைப் பெறவேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக அரசு இருப்பதால் நிச்சயம் பழைய ஓய்வூதிய திட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தீபாவளி பரிசாக பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications