பழைய ஓய்வூதியத் திட்டம் பலன்கள்.. NPS புதிய பென்ஷன் திட்டத்தில் GPF பணப்பிடித்தம்? சர்ப்ரைஸ் வருமா
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களிடம் இருந்து எந்த சந்தாவும் பிடிக்காத திட்டம். அதையே தேர்தல் வாக்குறுதி எண் 309-ன் படி உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.. இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தக்கோரி போராட்டத்தை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம்.. போராட்டத்துக்கான தேதியையும் அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, போட்டா-ஜியோ போன்ற அமைப்புகள் திட்டமிட்டிருந்த காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு மத்தியில், தமிழ்நாடு அரசு புதிய மற்றும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) அறிவித்துள்ளது.

ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள தமிழ்நாடு உத்தரவாத ஓய்வூதியத் திட்டம், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு எதிரானது என்று CPS ஒழிப்பு இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டம்
2021 சட்டமன்ற தேர்தலின்போது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்று திமுக வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதியை நம்பி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் திமுகவுக்கு வாக்களித்ததாக CPS ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உத்தரவாத ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டம் போல இல்லாமல், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து சந்தா பிடிக்கும் திட்டமாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது ஏற்கனவே இருந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மறுவடிவமே தவிர, உண்மையான பழைய ஓய்வூதியத் திட்டம் அல்ல என்றும் கூறியுள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டம்
மேலும், இந்த புதிய திட்டம் எந்த தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்ற தெளிவான அறிவிப்பும் இல்லை. அதேபோல், ஓய்வூதியத்தில் தொகுத்துப் பெறும் வசதி (lump sum) இல்லை என்பதும் அரசு ஊழியர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் CPS ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
50 சதவீதம் ஓய்வூதியம்
இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்...
அந்த அறிக்கையில், "பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தேர்தல் கால வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது காலம் கடந்து 10 சதவீதம் மாதந்தோறும் ஊதியத்தில் பிடித்தம் செய்து, 50 சதவீத ஓய்வூதியம் அளிக்கப்படும் என்பது ஏற்கத்தக்கது அல்ல-.. தமிழக அரசின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது.
பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்த காலத்தில், ஜிபிஎப்-க்கு பணம் பிடித்தம் நடைமுறையில் இருந்தது.. அந்த நடைமுறை இதர, மூன்று ஓய்வூதிய திட்டங்களும் புறக்கணித்துவிட்டன..
அதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி வரும் 10ல் சென்னை, கோவை, திருச்சி, நாகப்பட்டினம், திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications