எலே பேதில போவான்.. சென்னைக்கு போக 4,000 ரூபாயா? கட்டணக் கொள்ளையில் கல்நெஞ்ச ஆம்னி பஸ் ஓனர்கள்!
சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த நிலையில், வாக்களிக்கச் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த பொதுமக்கள் தற்போது மீண்டும் சென்னை நோக்கி திரும்பத் தொடங்கியுள்ளனர். தேர்தல் முடிந்ததும் வேலைக்காகவும், தொழில் நிமித்தமாகவும் தென் மாவட்ட மக்கள் மீண்டும் சென்னை நோக்கி செல்லும் நிலையில், அந்த கூட்டத்தை பயன்படுத்தி தனியார் பேருந்து நிறுவனங்கள் கட்டணத்தை இரட்டிப்பாக உயர்த்தியுள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2000 ரூபாயிலிருந்து 4,000 ரூபாய் வரை கூட ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடவுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி திரும்பும் பயணிகளிடையே இந்த பிரச்சனை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. சாதாரண நாட்களில் நெல்லையிலிருந்து சென்னை செல்லும் பேருந்துகளில் ஒரு இருக்கைக்கான கட்டணம் பொதுவாக 600 முதல் 800 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.

வார இறுதி நாட்கள் அல்லது தொடர் விடுமுறை காலங்களில் மட்டுமே அவ்வப்போது சிறிய அளவில் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த மக்கள் மீண்டும் சென்னை திரும்பத் தொடங்கியுள்ளனர்.
சென்னை செல்லும் பயணிகள்
இந்த சூழலில், அந்த தேவையை பயன்படுத்திக் கொண்டு கட்டணத்தை திடீரென அதிகரித்துள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, 600 ரூபாய் அளவில் இருந்த இருக்கை கட்டணம் தற்போது 1550 ரூபாய்க்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, நெல்லையிலிருந்து சென்னை செல்லும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கு 2500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம்னி பஸ் கட்டண உயர்வு
அதேபோல், மதுரையிலிருந்து சென்னை செல்லும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கும் 2400 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டிக்கெட் முன்பதிவு தளங்களில் காட்டப்படுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் காரணமாக ஏற்கனவே பலர் சொந்த ஊர்களுக்கு சென்று இருந்த நிலையில், இப்போது அனைவரும் ஒரே நேரத்தில் சென்னை திரும்ப முயற்சிப்பதால் பேருந்துகளுக்கு அதிகமான தேவை ஏற்பட்டுள்ளது.
அதிக கட்டணம்
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில தனியார் பேருந்து நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, குடும்பத்துடன் பயணம் செய்யும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் இதனால் அதிக சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு முன்பே கூட்டம் அதிகமாக இருக்கும் காலங்களில் கட்டணத்தை தேவையின்றி உயர்த்தக்கூடாது என்று அரசு தரப்பில் பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
சென்னை பயணிகள் புகார்
இருந்தாலும், அந்த எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் சில தனியார் பேருந்து நிறுவனங்கள் வெளிப்படையாக கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் தரப்பில், இந்த கட்டண உயர்வை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக, தேர்தல் முடிந்து மக்கள் மீண்டும் சென்னை திரும்பும் இந்த நேரத்தில், தனியார் பேருந்து கட்டண உயர்வு பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளதால், அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும், தேவையான இடங்களில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications