ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 முதல் 5 மடங்கு உயர்வு.. நாகர்கோவில் டூ சென்னைக்கு எவ்வளவு?
சென்னை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 முதல் 5 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்களுக்கு ரயில்களில் டிக்கெட் கிடைக்காவிட்டால் பயணிகள் பெரிதும் பயணிப்பது அரசு போக்குவரத்து கழக பேருந்துகளையே! இதிலும் புக்கிங் ஃபுல்லாகிவிட்டால் மக்களின் அடுத்த தேர்வு ஆம்னி பேருந்துகள்தான்.

தீபாவளி, பொங்கல், தொடர் விடுமுறை காலங்களில் மக்கள் பெரிதும் பயன்படுத்துவது ஆம்னி பேருந்துகளையே! ஏசி வசதி, தூங்குவதற்கான பர்த் வசதி, சாய் தள நாற்காலியிலும் தூங்கும் வசதி என இருப்பதால் இந்த பேருந்துகளை மக்கள் நாடுகிறார்கள்.
இந்த பேருந்துகளில் கட்டணங்கள் என்பது நிலையாக இல்லை என்பதே பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. பண்டிகை காலங்களில் கட்டண கொள்ளை அடிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழும். அரசும் அவர்களை எச்சரிக்கும். ஆனாலும் கட்டண கொள்ளை நிறுத்தவே நிறுத்தப்படாது. அது போல் தற்போது தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும் தமிழகத்திற்கு வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது.

அந்த கட்டணமானது 3 முதல் 5 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக தெரிகிறது. ரெட் பஸ் செயலியில் நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு செல்ல சராசரியாக ரூ 2,650 முதல் 3,420 என டிராவல்ஸ் ஏஜென்சிகளுக்கேற்ப மாறுபடுகிறது. அது போல் சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்ல ரூ 750 முதல் 1370 ரூ வரை உள்ளது.
அது போல் மதுரை மாட்டுத்தாவணி டூ சென்னைக்கு வர 1550 ரூபாய் முதல் 2799 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. தூத்துக்குடி முதல் சென்னை வரை 1950 ரூபாய் முதல் 2849 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அது போல் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு ரூ 2,349 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது.

கோவையிலிருந்து சென்னைக்கு ரூ 2277 முதல் ரூ 3130 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து சென்னைக்கு ரூ 1599 முதல் ரூ 2134 வரை வசூலிக்கப்படுகிறது. தொடர் விடுமுறையே ஆம்னி பேருந்துகளின் உயர்வுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த கட்டண உயர்வால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே தென் மாவட்டங்களுக்கு விடுமுறைக்காக சென்றவர்கள் இடையூறின்றி பயணம் செய்ய அரசு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.














Click it and Unblock the Notifications