அதிர்ச்சி! சாமானியர்களுக்கு ஷாக் தரும் ஆம்னி பஸ் டிக்கெட் விலை.. தீபாவளியே ஆரம்பிக்கல! அதுக்குள்ளயா
சென்னை: தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்படும் நிலையில், ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பார்த்தால் பொதுமக்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் போல இருக்கிறது.
இந்தியாவிலேயே அதிகம் நகரமயமாக்கல் ஆன மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இதனால் வேலைக்காகச் சொந்த ஊர்களை விட்டு வேறு நகரங்களில் இருக்கும் மக்கள் தமிழகத்தில் அதிகம்.
இப்படி பலரும் வேறு ஊர்களில் பணியாற்றி வருவதால், அவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் சொந்த ஊர் திரும்பி குடும்பத்துடன் பண்டிகை கொண்டாட விரும்புகின்றனர்.

ஆம்னி பேருந்துகள்
ஆனால், இதுபோன்ற பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தைப் பார்த்தாலே சாமானியர்களுக்கு ஷாக் அடித்துவிடும். அடுத்த மாதம், அதாவது அக். 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், அதற்கான டிக்கெட் முன்பதிவுகளை ஆம்னி பேருந்துகள் தொடங்கி உள்ளன. கிட்டதட்ட அனைத்து ஆம்னி பேருந்துகளிலும் வழக்கத்தை விடக் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாகத் தான் டிக்கெட்களின் விலை உள்ளன.

அதிகம்
அரசு பேருந்துகளின் சாதாரண கட்டணம் தான் என்றாலும், அது ஏற்கனவே பெரும்பாலும் நிரம்பிவிட்டன. அனைத்து ஊர்களுக்கும் ரயில் இல்லை என்பதாலும் அதுவும் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கிவிட்டதால் அங்கும் டிக்கெட்கள் இல்லை. இதனால் வேறுவழியின்றி ஆம்னி பேருந்துகள் பக்கம் வரும் சாமானியர்களுக்கு அதிர்ச்சி தருகிறது டிக்கெட்களின் விலை.

இரண்டு மடங்கு
அனைத்து ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் குறைந்தது 2 மடங்கு உயர்ந்து இருக்கிறது. எடுத்துக்கட்டாகச் சென்னையில் இருந்து கோவை செல்லும் ஏசி படுக்கை டிக்கெட் வழக்கமாக 900 ரூபாயாக இருக்கும் ஆனால், தீபாவளி காலத்தில் இது 1130- 2030 ரூபாய் வரை உள்ளது. ஏசி இருக்கை டிக்கெட் வழக்கமாக ரூ. 650-க்கு விற்கும் நிலையில், தீபாவளி சமயத்தில் இது 930 -1600 வரை இருக்கிறது. ரூ. 690க்கு இருக்கும் சாதாரண படுக்கை 990-1690 ரூபாய் வரையிலும், ரூ. 550க்கு விற்கப்படும் சாதாரண இருக்கை டிக்கெட் 720-1240 ரூபாய் வரையிலும் தீபாவளி சமயத்தில் உயர்த்தப்பட்டு உள்ளது.

எவ்வளவு
அதேபோல சென்னையில் இருந்து மதுரை செல்லும் ஏசி படுக்கை டிக்கெட் ரூ. 900 இருக்கும் நிலையில், அது 1170- 2000 ரூபாய் வரை உள்ளது. வழக்கமாக ரூ.500-க்கு விற்கும் ஏசி இருக்கை டிக்கெட், தீபாவளி சமயத்தில் 870- 1490 வரை உள்ளது. அதேபோல ரூ. 650க்கு இருக்கும் சாதாரண படுக்கை 930-1580 ரூபாய் வரையிலும், ரூ. 400இல் உள்ள சாதாரண இருக்கை டிக்கெட் 690-1170 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தொடர் கதை
கோவை, மதுரை மட்டுமின்றி சென்னை, திருச்சி உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து முக்கிய ஊர்களுக்குச் செல்லும் கட்டணமும் இரண்டு முதல் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. ஒவ்வொரு முறையும் பண்டிகை காலத்தில் இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னாலும், இந்த முறை தொடர்கிறது என்பதே கசப்பான உண்மை.

நடவடிக்கை தேவை
மொபைலில் உள்ள டிக்கெட் முன்பதிவு செயலியில் பார்த்தாலே டிக்கெட் எந்தளவு உயர்ந்து உள்ளது என்பது தெரிந்துவிடும். இதைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடும் பொதுமக்கள், அரசே அதிகபட்ச டிக்கெட் தொகையை அறிவிக்க வேண்டும் என்றும் அதைத் தாண்டி வசூலித்தால் உரிமம் ரத்து போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மேலும், தீபாவளிக்குக் கிடைக்கும் போனஸ் தொகையை அப்படியே டிக்கெட்டிற்கே கொடுத்துவிட்டு வெறும் கையுடன் வீட்டிற்குச் செல்ல வேண்டிய சூழல் இருப்பதாகவும் புலம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications