ஆம்னி பஸ் புக் பண்ணி இருக்கீங்களா? இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே- பறந்த பரபர உத்தரவு
சென்னை: ஆம்னி பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே, பொதுமக்களுக்கு வெளியூர் செல்லும் திட்டம் இருந்தால் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
சென்னையில் வெளியூர் செல்லும் பேருந்துகளை இயக்க கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இருப்பினும், நகருக்குள்ளே பேருந்து நிலையம் அமைந்ததால் அங்குப் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.

கோயம்பேட்டில் இருந்து சென்னை புறநகரைத் தாண்டவே சில மணி நேரம் கூட ஆகும் சூழல் உருவானது. இதன் காரணமாக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
கிளம்பாக்கம்: அதன்படி கடந்த ஆட்சியில் வண்டலூரை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், பல்வேறு தாமதத்திற்குப் பிறகு கடந்த டிசம்பர் மாதம் தான் இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்தது. இதை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஆம்னி பேருந்துகளுக்கும் அங்குத் தனி பிளாட்பார்ம்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. கிளம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால் ஆம்னி பேருந்து நிச்சயம் அங்கிருந்து தான் இயக்க வேண்டும் என்று சிஎம்டிஏ மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆம்னி பேருந்துகள்: இருப்பினும், இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிளாம்பாக்கத்தில் அனைத்து ஆம்னி பேருந்துகளையும் நிறுத்தி வைக்க போதிய இடவசதி இல்லை என்பது அவர்கள் புகாராக இருந்தது. இது தொடர்பாக அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஜூன் 2ஆம் தேதி வரை சென்னை மாநகருக்குள் ஆம்னி பேருந்துகள் வர அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது..
உத்தரவு: அதற்குள் முடிச்சூரில் ரூ.28 கோடி செலவில் 5 ஏக்கர் பரப்பளவில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த தனி இடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்தச் சூழலில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வாடகை முறையில் பேருந்துகள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ஜூன் 1ஆம் தேதி முதல் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களே கவனம்: அதன்படி இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனால் வெளியூர் செல்லும் மக்கள் ஆம்னி பேருந்துகளை புக் செய்திருந்தால் ஒரு முறை இரண்டு முறை எங்கு ஏற வேண்டும் என்பதை செக் செய்து கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications