பறக்கும் ரயில்.. சென்ட்ரலுக்கு யூடர்ன் அடித்த மக்கள்.. இன்று முதலே.. எம்டிசி சொன்ன நல்ல செய்தி
சென்னை: சிந்தாதிரிப்பேட்டை உடன் பறக்கும் ரயில் சேவை நிறுத்தப்பட்ட முதல் நாளான திங்கள்கிழமை அன்றே சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் போதிய பஸ் வசதி இல்லாததால், ஓமந்தூரார் பஸ் ஸ்டாப்பில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சென்னை-அரக்கோணம்) மற்றும் சென்னை - கும்மிடிப்பூண்டி புறநகர் பகுதிகளில் இருந்து பயணிகள் கடற்கரையில் இருந்து பேருந்துகளில் செல்வதற்குப் பதிலாக சென்னை சென்ட்ரல் வழியாக சிந்தாதிரிப்பேட்டைக்கு செல்வதால், தாங்க முடியாத கூட்டம் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே இருக்கிறது.

இது தொடர்பாக பெரம்பூரைச் சேர்ந்த பயணி ஒருவர் கூறுகையில், "சென்னை கடற்கரை வழியாக சிந்தாதிரிப்பேட்டைக்கு செல்வதை விட, சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு பயணித்தால் பயண நேரம் குறைவாக இருக்கிறது. அது மட்டுமின்றி சென்னை கடற்கரையிலிருந்து பேருந்துகள் கிடைப்பது குறைவாக இருக்கிறது. எனவே சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தே சிந்தாதிரிப்பேட்டைக்கு செல்ல விரும்புகிறேன். எனவே சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்" என்றார்.
இதனிடையே ரயில் பயணிகளின் வசதிக்காக, சிந்தாதிரிப்பேட்டை, சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரை வழியாக வள்ளலார் நகருக்கு 140 கூடுதல் பேருந்து சேவைகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்தது. ஆனாலும் சென்ட்ரலில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு பஸ் போக்குவரத்து போதுமானதாக இல்லை.
குறிப்பாக பீக் ஹவர்ஸில் பேருந்து போக்குவரத்து போதுமானதாக இல்லை என்று பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபற்றி சென்னை மாநகர போக்குவரத்து கழக இயக்குநர் அன்பு ஆபிரகாம் கூறுகையில், 140 சேவைகளுக்கு அதிகமாக சென்ட்ரலில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளோம் என்றார்.
அண்மையில் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது ரயில் பாதை அமைப்பதற்காக கடற்கரை மற்றும் சிந்தாதிரிப்பேட்டை இடையே பறக்கும் ரயில் சேவையை நிறுத்தி வைத்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டது. அத்துடன் உடனடியாக 4வது ரயில் பாதை பணிகளையும் தொடங்கியது.
ஆனால் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவையில் தினசரி 1.2 லட்சம் பயணிகள் பயணிப்பார்கள். அவர்களில் 60-70% பேர் சென்னை - அரக்கோணம் மற்றும் சென்னை - கும்மிடிப்பூண்டி புறநகர்ப் பிரிவுகளில் இருந்து வருபவர்கள் ஆவர். ஏனெனில் சென்னையில் ஐடி உலகமே வேளச்சேரியை சுற்றித்தான் இருக்கிறது. அங்கு லட்சக்கணக்கானோர் வேலை செய்கிறார்கள். அவர்கள் அனைவருமே சென்னை கடற்கரையில் வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயிலில் தான் ஏறுவார்கள். ஆனால் திங்கள்கிழமை, இந்த பயணிகள் அனைவரும் சென்னை கடற்கரைக்குப் பதிலாக சென்ட்ரல் செல்லும் புறநகர் ரயில்களில் ஏறிவந்தார்கள். இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் தாங்க முடியாத கூட்டம் ஏற்படுகிறது.
அயனாவரத்தைச் சேர்ந்த பயணி கூறுகையில், "பெரம்பூரில் இருந்து வேளச்சேரிக்கு நேரடியாக பேருந்தில் பயணிக்க 1.30 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இதனால் ரயிலில் செல்வதையே விரும்புகிறோம். ஆனால் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து ரயில் சேவைகளின் எண்ணிக்கை 124லிருந்து 80 ஆக குறைத்துவிட்டார்கள். 25 நிமிடத்திற்கு பதிலாக 15 நிமிடம் என்கிற அளவிற்கு பீக் அவர்ஸில் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றார்.
இதனிடையே சிந்தாதிரிப்பேட்டை வேளச்சேரி இடையே ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்ட செய்தி தொடர்பாளர் கூறினார். இதற்கிடையே சென்னை துறைமுகம் மற்றும் பார்க் டவுன் ரயில் நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளத்தை அகற்றும் பணியை ரயில்வே தொடங்கிவிட்டது. ஏழு மாதங்களுக்கு பிறகே வேளச்சேரி கடற்கரை இடையே மீண்டும் புறநகர் ரயில் சேவை இயல்பு நிலையை அடையும்.












Click it and Unblock the Notifications