ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு சிக்கல்.. சாகச விளையாட்டுக்கு அரசு பணமா? ஐகோர்ட்டில் இன்னொரு வழக்கு!
சென்னை: சென்னையில் வரும் டிசம்பர் 8, 9 தேதிகளில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 பந்தயத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு செலவில் சாகச விளையாட்டுகளை நடத்துவது சட்டவிரோதம் என அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் முதல்முறையாக இரவு நேர ஸ்ட்ரீட் சர்கியூட் (Street circuit) ஃபார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக, அரசு சார்பில் 42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கான பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை தீவுத் திடலில் நடத்தப்படும் ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த பாலுசாமி என்பவர் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் ஒப்புதல் கேட்கவில்லை என்றும், அரசு செலவில் சாகச விளையாட்டுகளை நடத்துவது சட்டவிரோதம் என்றும் அவர் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக, இருங்காட்டுக்கோட்டையில் தனி பந்தய தளம் இருக்கும் நிலையில், தீவுத்திடல் மட்டுமல்லாமல் சென்னை நகரில் இந்த கார் பந்தயத்தை நடத்த தடை விதிக்க கோரி சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மருத்துவர் ஸ்ரீஹரிஷ் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், உயர் நீதிமன்றம், துறைமுகம், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, ராணுவ மற்றும் கடற்படை அலுவலகங்கள் செல்கின்ற வழியில், பந்தய வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களின் போக்குவரத்தை தடுக்கும் வகையில் பந்தயங்கள் நடத்தப்படுவதாக வாதிடப்பட்டது.

250 கிலோமீட்டர் வேகத்தில் பந்தய கார்கள் செல்லும்போது 130 டெசிபல் ஒலி மாசு ஏற்படும் என்பதால், இது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பாதிக்கும் என குற்றம்சாட்டப்பட்டது. பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் பந்தயம் நடக்க இருப்பதாகவும், அப்பகுதியில் ஒலி மாசை ஏற்படுத்தக்கூடாது என்றும், பொதுமக்கள் பாதுகாப்பு பரிசீலிக்கப்படாமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பில், தெரு பந்தயமாக இரண்டு நாட்கள் மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடத்தப்பட உள்ளதாகவும், அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது. இதையடுத்து காவல்துறை, தீயணைப்பு, ராணுவம், கடற்படை ஆகியவற்றின் அனுமதி கடிதங்களை தாக்கல் செய்ய அரசு தரப்பு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications