மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுவதற்கு 'சபாஷ்'.. இது 'ஒன்இந்தியா தமிழ்' வாசகர்கள் தீர்ப்பு
சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிடுவது சிறப்பான முடிவு என்று 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்களில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடப்போவதாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். கடந்த வருடம் கட்சி துவங்கிய கமல்ஹாசன், தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் சென்று, மக்களிடம் மதிப்பை அதிகரித்துள்ளார்.
இந்த நிலையில், கமல்ஹாசன் தனது கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளதால், ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறும் வாய்ப்பும் உள்ளது. அதேநேரம், மக்கள் நீதி மய்யம் ஓராண்டு ஆன குழந்தை என்பதால், தனித்து நின்று தங்கள் பலத்தை காட்டிவிட முடியுமா என்ற ஐயப்பாடும் எழுகிறது.

சபாஷ் சரியான முடிவு
இதுகுறித்து நமது வாசகர்களிடமே கேள்வி கேட்டிருந்தோம். அதில், கமல்ஹாசன் முடிவை சபாஷ் என்று, 51.22 சதவீதம் வாசகர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது பாதிக்கும் மேற்பட்ட வாசகர்கள் கருத்து, சபாஷ் என்பதாகத்தான் உள்ளது. கமல்ஹாசன் கட்சி கொள்கைக்காகவோ, அல்லது அவருக்கு போதிய மக்கள் செல்வாக்கு வந்துவிட்டது என நினைத்தோ, எப்படியோ தெரியாது, ஆனால் இந்த முடிவு சரிதான் என்கிறார்கள் பெருவாரியான மக்கள்.

தவறு என்போர் குறைவு
அதேநேரம், தவறான முடிவு என 6.88 சதவீதம் பேர் கூறியுள்ளனர். கமல்ஹாசன் கட்சி தனித்து போட்டியிடுவதால் ஆளும் கட்சிக்கே அது சாதகமாக போய்விடும் என்ற எச்சரிக்கை உணர்வாலோ அல்லது, மக்கள் நீதி மய்யம் தனித்து பெரிய தாக்கத்தை உருவாக்க முடியாது என்பதாலோ, இதுபோல அவர்கள் கூறியுள்ளனர்.

வேறு வழியில்லை
வேறு வழியில்லையே என 27.36 சதவீதம் பேர் கூறியுள்ளனர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மக்கள் நீதி மய்யம் திட்டமிட்டிருந்த நிலையில், அக்கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துவிட்டது. எனவே, மக்கள் நீதி மய்யத்திற்கு வேறு வழியில்லை என்ற நிலைப்பாட்டுக்கு இவர்கள் வந்திருக்கலாம்.

பொறுத்திருந்து பார்ப்போம்
கமல்ஹாசன் முடிவு மாறக்கூடும் என்று 8.24% மற்றும் நோ கமெண்ட்ஸ் என 6.32% பேர் தெரிவித்துள்ளனர். ஆக மொத்தம், மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுவதில் பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியாகத்தான் உள்ளனர் என்பது மட்டும் உறுதியாகிறது.












Click it and Unblock the Notifications