விண்ணை முட்டும் காய்கறி விலை.. பண்டிகை காலத்தில் மேலும் உயரும் அபாயம்?? மத்திய அரசு திட்டம் என்ன
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகவும் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாலும் பண்டிகை காலங்களில் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் பெய்த கனமழையால் தினசரி பயன்படுத்தும் காய்கறிகளின் விலை அளவுக்கு உயர்ந்துள்ளது.
பண்டிகை காலத்தில் இப்படி அத்தியாவசிய காய்கறி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மிகப் பெரிய சிக்கலாக உருவாகியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வும் காய்கறி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

காய்கறி விலை உயர்வு
மத்திய அரசு சமையலறை பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் காய்கறி விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கிறது. வெங்காயம் மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளின் விலை கடந்த சில வாரங்களில் கணிசமாக உயர்ந்துள்ளன, அதே நேரத்தில் பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய்களின் விலை கடந்த மாதத்தைப் போலவே தொடர்கிறது. மொத்த சந்தையில் காய்கறி வியாபாரிகள் கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ .15 வரையும் சில்லறை சந்தையில் கிலோவுக்கு ரூ.15- 20 வரையும் உயர்ந்துள்ளது. இதே நிலை வரும் நாட்களிலும் தொடர்ந்தால் அது பொதுமக்களுக்குப் பெரிய சிக்கலைத் தரலாம் என்று எகானிமி டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்ன காரணம்
நாட்டில் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கறிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு அதிகம் செலவாகிறது. இத்துடன் காய்கறி பற்றாக்குறையும் சேர்ந்து கொள்ளச் சில்லறை சந்தைகளில் காய்கறிகளின் விலை உயர்ந்து, சில்லறை வர்த்தக சந்தையிலும் மிக மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. ஆனால், மத்திய அரசு இதற்கு மாறான தகவலை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு விளக்கம்
அதாவது மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி நாட்டில் வெங்காயத்தின் சராசரி விலை ரூ 39ஆக உள்ளது. இது கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 11 ரூபாய் அதிகமாகும். அதேநேரம் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட சில நகரங்களில் வெங்காயத்தின் விலை 50 முதல் 65 ரூபாய் வரை கூட விற்பனையாகிறது. அதேநேரம் இது கடந்த ஆண்டு விற்பனையான சராசரி விலையை (ரூ 46) விடக் குறைவாகும். அதேபோல தக்காளியின் விலையும் கடந்த ஆண்டுடன் (ரூ 44) ஒப்பிடுகையில் இந்த ஆண்டு (ரூ 41) குறைந்துள்ளதாகவே மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு திட்டம்
உற்பத்தி செய்யப்படும் அனைத்து வெங்காயமும் ஒரே நேரத்தில் சந்தைக்கு வருவதைத் தடுத்து நிறுத்தி, தேவைக்கு ஏற்பட வெங்காயம் போன்ற காய்கறிகள் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டதே விலை குறைந்ததற்குக் காரணம் என்று மத்திய நுகர்பொருள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நவம்பர் இரண்டாவது வாரத்தில் தான் காய்கறிகள் சந்தைக்கு வரும் என்பதால் செப்டம்பர் மற்றும் நவம்பர் தொடக்கத்தில் காய்கறி விலை உயர்வது என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால், மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாகவே கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு காய்கறி விலை குறைவாக உள்ளதாக நுகர்பொருள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications