நல்லா கவனியுங்க! லெட்டர் தராத "அந்த" 1 எம்எல்ஏ யார்? அவருக்கே தெரியும்? அவையில் போட்டுடைத்த ஸ்டாலின்
சென்னை: இன்று தமிழ்நாடு சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஒரு குறிப்பிட்ட எம்எல்ஏவின் பெயரை குறிப்பிடாமல் அவர் மீது முக்கியமான விமர்சனம் ஒன்றை வைத்தார்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாள் இன்று. இன்று ஆளுநர் உரைக்கு பதில் தரும் உரையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாடு சட்டசபையில் உங்கள் தொகுதியின் முதல்வன் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் அந்த திட்டத்தின் பயன்கள் குறித்தும், திட்டத்திற்காக அளிக்கப்பட்ட மனுக்கள் குறித்தும் தெரிவித்தார்.

ஸ்டாலின் உரை
அவர் தனது உரையில், உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டம் பற்றி இங்கே பேச விரும்புகிறேன். இந்த திட்டம் கடந்த 7-5-2022ம் தேதி 110 விதியின் கீழ் 1000 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டத்தை அறிவித்தேன். அதன்படி எல்லா தொகுதியிலும் இருக்கும் எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியில் தீர்க்கப்படாமல் இருக்கும் கோரிக்கைகளை எழுதி பட்டியலிட்டு மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தேன். அதை ஏற்று எம்எல்ஏக்கள் வரிசையாக கோரிக்கைகளை அனுப்பினார்கள்.

சட்டசபை
இதுவரை 233 சட்டசபை உறுப்பினர்கள் இந்த கோரிக்கை கடிதங்களை அனுப்பினார்கள். நன்றாக கவனியுங்கள், ஒன்றே ஒன்றுதான் வரவில்லை. 234ல் என்னையும் சேர்த்து 233 பேரிடம் இருந்து கடிதங்கள் வந்துள்ளன. ஒரே ஒருவர் கொடுக்கவில்லை. அந்த கொடுக்காத நபர் யார் என்று நான் சொல்ல விரும்பவில்லை. கொடுக்காத நபர் யார் என்று அவருக்கே தெரியும். இந்த திட்டத்தின் கீழ் 1483 பணிகளுக்கான கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கடிதங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

துறை மதிப்பீடு
துறை வாரியாக மதிப்பீடு செய்து, அவரை உயர் கமிட்டியில் வைத்து விவாதம் செய்து, அந்த பணிகளை இந்த ஆண்டிலேயே நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அந்த ஒரு எம்எல்ஏ யார்.. என்பதை முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்கவில்லை. உங்கள் தொகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக தீர்க்க முடியாத திட்டங்கள், முடங்கிக் கிடக்கும் திட்டங்கள் பற்றிய தகவல்களைத் தொகுத்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களை அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எல்லா எம்எல்ஏக்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் இந்த கடிதத்தை கொடுத்தார்.

கடிதம்
இந்த கடிதத்திற்கு வந்த பதில்கள் பற்றித்தான் முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் பேசினார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக எழுதிய கடிதத்தில், சட்டமன்ற உறுப்பினராகிய நாம் ஒவ்வொருவரும் நமது தொகுதியின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் நமது பங்களிப்பினை ஆற்றுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அந்த வகையில், மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு அவர்களது பிரதிநிதிகளாக விளங்கும் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நமக்கு உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தொகுதியிலும் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியப் பணிகள் குறித்து அந்தந்தத் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளைப் பெற்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து, இவற்றைப் பரிசீலித்து ஒப்புதல் வழங்கப்பட உள்ளது, என்று முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications