சென்னையில் கேட்ட “துப்பாக்கி” சத்தம்.. ஜஸ்ட் மிஸ்.. உயிர் தப்பிய டாக்டர்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி அருகே டீ குடித்துக் கொண்டிருந்த மாணவர் மீது துப்பாக்கியால் சுட முயன்ற டெல்லியைச் சேர்ந்த கஜராஜ் என்பவர் நாட்டுத் துப்பாக்கி உடன் பிடிபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவரை சுட முயன்றது ஏன் என்பது குறித்து அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரியில் (MMC) வேலூரைச் சேர்ந்த ரோகன் என்ற மாணவர் முதுநிலை மருத்துவப் படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ரோகன் அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு சென்னை மருத்துவக் கல்லூரி ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே டீ குடித்துக்கொண்டிருந்தார் முதுநிலை மருத்துவ மாணவர் ரோகன். அப்போது அதே கல்லூரியில் வேறொரு வகுப்பில் படிக்கும் டெல்லியைச் சேர்ந்த கஜராஜ் என்பவர் அங்கு வந்துள்ளார்.
டீக்கடையில் ரோகனை பார்த்ததும் ஆத்திரமடைந்த கஜராஜ் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரோகனை மிரட்டத் தொடங்கியுள்ளார். திடீரென ரோகனை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால், துப்பாக்கி குண்டு அவர் மீது படாமல் சென்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டால் அருகில் இருந்தவர்கள் பதறினர்.
பின்னர் லாவகமாக கஜராஜை மடக்கிப் பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர், அவர் கையிலிருந்து நாட்டுத் துப்பாக்கியையும் பறித்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கஜராஜை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
காதல் விவகாரத்தில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது. தொடர்ந்து, கஜராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
தான் காதலிக்கும் அதே பெண்ணை ரோகனும் காதலிப்பதாக கஜராஜுக்கு தெரியவந்துள்ளது. இதனால்தான் அவரை மிரட்டும் நோக்கத்தில் துப்பாக்கியுடன் சென்றதாக கஜராஜ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் எங்கிருந்து துப்பாக்கியை வாங்கினார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications