மீண்டும் மோடி ஆட்சி.. வெளியான 2024 தேர்தல் கருத்துக்கணிப்பு! ‘இந்தியா’ எத்தனை தொகுதியில் வெல்லும்?
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று 3 வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக ஆட்சி செய்தியில் இருந்து வருகிறது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி வென்று ஆட்சியை கைப்பற்றியது. 5 ஆண்டுகள் கழித்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று 2 வது முறையாக ஆட்சி அமைத்தது. இந்த அரசின் பதவி காலம் அடுத்த ஆண்டு நிறைவடைந்த மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் தொடர்பான பணியில் எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சியான பாஜகவும் இறங்கிவிட்டன.

இந்த தேர்தலில் 3 வது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்குமா அல்லது காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி வெற்றிபெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. இந்த நிலையில், 2024 தேர்தலில் வெற்றிவாய்ப்பு யாருக்கு உள்ளது என்பதை அறிய ஏபிபி - சி வோட்டர் நிறுவனங்கள் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது.
நாடு முழுவதும் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி முதல் டிசம்பர் 21 ஆம் தேதி வரை வாக்குரிமை பெற்ற மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது. இந்த கருத்துக்கணிப்பில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 295 தொகுதிகள் முதல் 335 தொகுதிகளில் வெற்றிபெற்று 3 வது முறையாக மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 'இந்தியா' கூட்டணி இந்த தேர்தலில் 165 முதல் 205 இடங்களில் வெற்றிபெறும் என ஏபிபி - சி ஓட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்து இருக்கிறது.
இந்தியாவில் மொத்தம் இருக்கும் 543 மக்களவைத் தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணி வட மாநிலங்களில் அதிகபட்சமாக 180 இடங்களில் 150 முதல் 160 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டு உள்ளது. மேற்கு மாநிலங்களில் உள்ள 78 தொகுதிகளில் 45 முதல் 55 இடங்களிலும், கிழக்கு மாநிலங்களில் இருக்கும் 153 இடங்களில் 80 முதல் 90 இடங்களிலும் வெற்றிபெறும் என்று கூறப்பட்டு உள்ளது. அதேபோல் தென் மாநிலங்களில் உள்ள 132 இடங்களில் வெறும் 20 முதல் 30 இடங்களில் மட்டுமே பாஜக வெல்லும் என்று அந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தென் மாநிலங்களில் 70 முதல் 80 இடங்களைக் கைப்பற்றும் என்றும், கிழக்கு மாநிலங்களில் 50 முதல் 60 இடங்களிலும், வட மாநிலங்களில் 20 முதல் 30 இடங்களிலும், மேற்கு மாநிலங்களில் 25 முதல் 35 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி தங்களுக்கு திருப்தி அளிப்பதாக 47.2 சதவீதம் பேர் இந்த கருத்துக் கணிப்பில் தெரிவித்து இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications