பவர்தான் இனி எல்லாம்.. தொக்காக மாட்டிய மேட்டர்.. பட்டென பிடித்த பாஜக.. அதிமுக குஷி! விழிக்கும் திமுக
சென்னை: தமிழ்நாட்டில் ஏற்படும் மின் தடை விவகாரத்தை அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் பெரிய அளவில் பயன்படுத்த முயன்று வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. திமுக தரப்பு இதை சமாளிக்க தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன் பல மாவட்டங்களில் 2-3 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது. சில மாவட்டங்களில் 10 மணிக்கு போன் மின்சாரம் 12 மணிக்குத்தான் வந்தது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று கொடுத்த விளக்கத்தில், மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.
இதுதான் மின்தடைக்கு காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார். அதோடு சட்டசபையிலும் இதை பற்றி செந்தில் பாலாஜி நீண்ட விளக்கம் கொடுத்தார்.
நாடு வளர வேண்டும் எனில்! ஊராட்சிகள் மேம்பட வேண்டும்! கிராமசபைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
அதிமுக
இந்த நிலையில் இந்த மின் வெட்டு விவகாரத்தை பெரிதுபடுத்த அதிமுக முடிவு செய்துள்ளதாம். ஆளும் திமுக தரப்பிற்கு எதிராக விமர்சனங்கள் எதுவும் இல்லாத நிலையில் காணப்படுகிறது. பெரிதாக அரசுக்கு எதிராக சர்ச்சைகள், அதிருப்திகள் இல்லை. ஆனால் இந்த மின்வெட்டு பிரச்சனையால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். திமுகவினரே சிலர் இணையத்தில் இதுபற்றி புகார் அளித்துள்ளனர். இதனால் அந்த விவகாரத்தை கையில் எடுக்க அதிமுக முடிவு செய்து உள்ளதாம்.
பெரிதாக்க பிளான்
இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மக்கள் கஷ்டப்படுகிறார். அரசு மக்களுக்கு மின்சாரம் வழங்க தவறிவிட்டது. மின்சாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்று குறிப்பிட்டார். இது ஒரு பக்கம் இருக்க பாஜகவும் இந்த விவகாரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு உள்ளது.
பாஜக பிளான்
இது பற்றி பேட்டி அளித்த பாஜக அண்ணாமலை தமிழகத்தில் செயற்கையாக மின்வெட்டை ஏற்படுத்தி அதன் காரணமாக லாபம் பார்க்க திமுக முயல்கிறது. தனியார் மின்சாரத்தை கொள்முதல் செய்து லாபம் பார்ப்பது திமுக அரசுக்கு கைவந்த கலை ஆகும். வெளிச்சந்தையில் தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்து ஊழலில் ஈடுபடுகின்றனர். இதுதான் இப்போது மின்தடைக்கு காரணம் என்று அண்ணாமலை புகார் வைக்கிறார்
செந்தில் பாலாஜி குறி
. மொத்தத்தில் இந்த பவர் மேட்டரை வைத்து ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுக்க அதிமுக, பாஜக முடிவு செய்துள்ளது. முக்கியமாக செந்தில் பாலாஜிக்கு செக் வைக்க அதிமுக, பாஜக திட்டமிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கில் திமுக கால் பதிக்க செந்தில் பாலாஜிதான் முக்கிய காரணம். கொங்கு மாவட்டத்தில் எழுச்சி அடைய பாஜக முயன்று வருகிறது. கொங்கு மாவட்டத்தில் மட்டுமாவது இருக்கிற ஆதரவை தக்க வைக்க வேண்டும் என்று அதிமுக முயன்று கொண்டு இருக்கிறது.
கொங்கு மாவட்ட எழுச்சி
ஆனால் இதற்கு செந்தில் பாலாஜியின் வியூகங்கள் பெரிய தடையாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கும் விதமாக பாஜக, அதிமுக மின்தடை விஷயத்தை கையில் எடுத்துள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் இந்த விவகாரத்தை பாஜக மையப்படுத்தி பிரச்சாரம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2006-11 வரையிலான திமுக ஆட்சியை நினைவுபடுத்த அதிமுக, பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது.
விழிக்கும் திமுக
இந்த நிலையில் இந்த விவகாரத்தை திமுக சமாளிக்க தீவிரமான திட்டங்களை வகுத்து வருகிறதாம். இது பற்றி அறிவாலய வட்டாரங்களில் விசாரித்ததில், மின் தடைக்கு திமுக காரணம் இல்லை. சென்ற ஆட்சியில் மின் உற்பத்தியை உயர்த்தவே இல்லை. இப்போது நிலக்கரி தட்டுப்பாடு வேறு. அது மட்டுமா.. மத்திய அரசும் வழங்க வேண்டிய 790 மெகாவாட் மின்சாரத்தை வழங்கவில்லை. இதுதான் திடீர் மின் தடைக்கு காரணம். அதையும் சரி செய்துவிட்டார்கள்.
Recommended Video
திமுக என்ன செய்யும்?
மின் தடையை வைத்து திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள். ஏன் குஜராத், உ.பியில் மின் தடை இல்லையா? மக்களிடம் இதை கொண்டு செல்வோம். மின் தடைக்கான காரணத்தை மக்களிடம் கொண்டு செல்வோம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மின்தடை பிரச்சனை குறித்து சமூக வலைத்தளங்களிலும், நேரடியாக மக்கள் மன்றங்களிலும் உண்மை கொண்டு செல்ல திமுக தரப்பு முடிவு செய்துள்ளதாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.