உண்மையில் யாருக்கு தண்டனை? பிடிஆர் இலாகா மாற்றத்தால் சிக்கல் தீரவில்லை.. தெளிவாக விளக்கும் ப்ரியன்!
சென்னை : "நிதி அமைச்சராகவே பழனிவேல் தியாகராஜனை தொடர வைத்திருந்தால், இதை அரசியல் ரீதியாக முதல்வர் ஸ்டாலின் கையாள்வதாக கருத முடியும். ஆனால் இப்போது துறையை மாற்றி இருப்பதன் மூலம் பிடிஆர் பேசியது உண்மைதான் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கப்பட்டுள்ளது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
தமிழக அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதித் துறை தங்கம் தென்னரசுவுக்கு வழங்கப்பட்டு, மனோ தங்கராஜ் வசமிருந்த தகவல் தொழில்நுட்பத் துறை பழனிவேல் தியாகராஜன் வசம் வழங்கப்பட்டுள்ளது. கேபினட்டில் நடைபெற்ற இந்த அதிரடி மாற்றங்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காப்பாற்றிய ஸ்டாலின் : இந்நிலையில், இந்த கேபினட் மாற்றம் தொடர்பாக ஒன் இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ள மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. முதலில் முதல்வர் ஸ்டாலினையும் சேர்த்து அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இடம்பெற்றனர். பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்ளே வந்தார். இதனால் அமைச்சரவை எண்ணிக்கை 35 ஆனது. பல அமைச்சர்களின் செயல்பாடுகளில் பிரச்சனைகள் இருக்கிறது என்ற பேச்சு இருக்கிறது.
அமைச்சர்கள் மாற்றப்படக்கூடும் என்ற பேச்சுகள் எழுந்தபோதுதான் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 2 ஆடியோக்கள் வெளியாகின. அவற்றை பிடிஆர் போலியான ஆடியோ என மறுத்தார். அதையொட்டியும் அமைச்சரவையில் இருந்து பிடிஆர் வெளியேற்றப்படுவார் என்ற யூகங்கள் கிளம்பின. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் பிடிஆரை காப்பாற்றி இருக்கிறார்.
முதல்வருக்கு தெரியும் : வெளியான அந்த ஆடியோவில் இருந்தபடி பிடிஆர் பேசினாரா என்பது அவரது மனசாட்சிக்குத் தெரியும். உளவுத்துறை மூலமாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தெரியும். ஒருவேளை பிடிஆர் பேசியது தெரியவந்து, அவரை மன்னித்து விடலாம் என நினைத்தால், 2 ஆண்டுகளாக நிதித்துறை அமைச்சராக திறமையாகப் பணியாற்றியவரை அப்படியே தொடர விட்டிருக்கலாமே.
எதற்கு அவரை தூக்கி தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அமைச்சராக போட வேண்டும்? அவரை நீக்க முடியாத நிலையில், அவர் மீது பெயருக்கு ஒரு நடவடிக்கை எடுப்பதைக் காட்டவேண்டும் என்பதற்காக அமைச்சரவையில் இருந்து நீக்காமல் இலாகாவை மட்டும் மாற்றியிருக்கிறார்கள். அது இந்தப் பிரச்சனைக்கு தீர்வாகாது. குழப்பமான சூழலைத்தான் ஏற்படுத்துகிறது.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு வலு : நிதி அமைச்சராகவே பிடிஆரை தொடர வைத்திருந்தால், இதை அரசியல் ரீதியாக முதல்வர் ஸ்டாலின் கையாள்வதாக கருத முடியும். ஆனால் இப்போது துறையை மாற்றி இருப்பதன் மூலம் பிடிஆர் பேசியது உண்மைதான் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கப்பட்டுள்ளது.
பிடிஆர் துறையை மாற்றியிருப்பதோடு, தொழில் துறையில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த தங்கம் தென்னரசுவுக்கும், ஐ.டி துறையில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த மனோ தங்கராஜுக்கும் தண்டனை அளிக்கும் வகையில் முதல்வரின் இலாகா மாற்றம் நடந்துள்ளது. இதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications