பெரியாருக்கு மரியாதை செலுத்தவே போரா? பெரிய அக்கப்போரால்ல இருக்கு! ஓபிஎஸ், எடப்பாடி அணியினர் மோதல்!
சென்னை: இன்று சென்னையில் தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் ஓபிஎஸ், எடப்பாடி தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். வேலூரில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தியுள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் அதிமுகவினர் பெரியார் பிறந்தநாளையொட்டி, அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்த வந்தனர்.
பெரியார் சிலைக்கு கீழே பெரியார் படத்தை வைத்து ஓபிஎஸ் அணியினர் மரியாதை செலுத்தினர். பின்னர் வந்த எடப்பாடி பழனிசாமி அணியினர், ஓபிஎஸ் அணியினர் வைத்த பெரியார் படத்துக்கு நாங்கள் மரியாதை செலுத்த மாட்டோம் எனக் கூறி, சிலையின் மற்றொரு புறத்தில் இன்னொரு பெரியார் படத்தை வைத்து மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில், ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் இடையே மோதல் ஏற்பட்டது அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் இன்று பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்விலும் மோதல் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications