அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ், சசிகலா? என்ன பதவி? என்ன பொறுப்பு? குழப்பத்தில் 6 தலைவர்கள்
சென்னை: அதிமுகவில் மீண்டும் சசிகலா, ஓபிஎஸ் இணைக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், ஒருவேளை கட்சிக்கு இருவரும் இணைக்கப்பட்டால் என்ன பதவி வழங்கப்படும்? அல்லது ஓபிஎஸ், சசிகலாவின் பொறுப்பு கட்சிக்குள் என்னவாக இருக்க முடியும்?
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது தொடர்பாக அதிமுக எடப்பாடி பழனிசாமி கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பழனிசாமி, "2026 தேர்தலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. அதேபோல் ஓபிஎஸ், சசிகலாவைக் கட்சியில் இணைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை" என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், இன்னொரு பக்கம் கட்சியில் உள்ள 6 முக்கிய தலைவர்கள் ஓபிஎஸ், சசிகலா இணைப்பு குறித்து வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. குறிப்பாக சி வி சண்முகம், நத்தம் விசுவநாதன் ஆகிய இருவரும் இபிஎஸுக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.
இதனிடையே சசிகலா வரும் 17 ஆம் தேதி முதல் சுற்றுப் பயணம் செய்ய இருப்பதாகத் தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிமுகவுக்குள் மீண்டும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா இணைக்கப்பட்டால் கட்சியில் அவர்களுக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும்? அதில் உள்ள சிக்கல்கள் என்ன? இது பற்றி மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சில விளக்கங்களை அளித்துள்ளார். ஷ்யாம் பேசுகையில், "நேற்று 'காட் ஃபாதர் எம்.ஜி.ஆர்' புத்தகத்தை எனக்குக் கொடுப்பதற்காக சில அதிமுகவினர் வீட்டுக்கு வந்திருந்தனர். அப்போது நான் அவர்களிடம் கட்சி இணைப்பு பற்றி வெளியே வரும் செய்திகள் பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள் 'அப்படி எல்லாம் ஒன்று இல்லை. ஒரு திருமண நிகழ்ச்சிக்காக அனைவரும் எடப்பாடி பழனிசாமியை போய் பார்த்தோம். அவ்வளவுதான். அதில் வேறு ஒன்றுமே இல்லை என்று சொன்னார்கள்.

அதிமுகவினர் மத்தியில் கட்சி ஒன்றுபட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், எதன் அடிப்படையில் ஒன்று படுவது என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது' என்று சொன்னார்கள். அதில் ஒரு உண்மை உள்ளதாக நான் உணருகிறேன்.
குறிப்பாக சசிகலாவும் ஓ. பன்னீர்செல்வமும் கட்சிக்குள் இணைக்கப்பட்டால், அவர்களுக்கு என்ன பதவி வழங்க முடியும்? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இப்போது அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசைன் இருக்கிறார். எம்.ஜி.ஆர் காலத்துத் தொண்டர் அவர். கட்சியில் உள்ள சீனியர். அந்த இடத்தை ஓபிஎஸ்க்கு தர முடியாது. அவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர்.
பன்னீர்செல்வமே, 'கட்சிக்கு நான் ஆட்சிக்கு எடப்பாடி என்றுதான் முடிவுசெய்தோம். திடீரென்று எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளராக ஆகிவிட்டார்' என்பதைச் சொல்கிறார். ஆகவே,தான் இப்போது குழப்பம் வருகிறது. ஒருவேளை ஓபிஎஸ் வந்தால், அவரை எங்கே வைப்பது? அவருடைய ரோல் கட்சியில் என்ன?
அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டவர்கள் பலர் மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குப் பொறுப்பு வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. ஆனால், இப்போது ஓபிஎஸ், சசிகலா பிரச்சினை அப்படி சாதாரண விசயம் இல்லை. ஒரு காலத்தில் எம்.ஜி.ஆரையே அதிமுகவிலிருந்து விலக்கவேண்டும் என சிதம்பரத்தில் ஒரு குழு தீர்மானம் போட்டது. அதில் கோவை மருதாசலம், கும்பகோணம் எம்.ஜி.ஆர் என்று ஒருவர், அப்துல் அஜீஸ் அனைவரும் சேர்ந்து அந்த முயற்சியை முறியடித்தனர்.
எம்.ஜி.ஆர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றிய போது கோவை செழியன், இந்திரகுமாரி எனப் பலரும் வெளியேறித் தனிக் கட்சி ஆரம்பித்தனர். அதன் பின்னர் அதிமுக வென்றது கட்சியில் இணைக்கப்பட்டனர். அதேபோலத்தான் எஸ்டிஎஸ் தனிக்கட்சி தொடங்கி மீண்டும் வந்தார்.
இப்படிப் பிரிந்து போனவர்கள் திமுக அதிமுகவில் இணையும் போது அவர்கள் எம்.ஜி.ஆர். அல்லது ஜெயலலிதா தலைமையை ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருந்ததில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்படி ஒரு தனித்துவமான தலைவராக அதிமுகவில் இன்னும் உயரவில்லை. ஆகவே, அங்கே ஒரு நெருக்கடி உள்ளதாகவே நான் உணருகிறேன்" என்கிறார்












Click it and Unblock the Notifications