கைகோர்க்கும் புள்ளிகள்.. "2 பேரும் ஓகே சொல்லியாச்சு".. போட்டு உடைத்த மா.செ! கூட்டணிக்கு அச்சாரம்!
எடப்பாடி பழனிசாமிக்கு கேட் போட புது கூட்டணி அமையவுள்ளது.
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் பிளானுக்கு களத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஒப்புதலோடு ஒன்றாக இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் அதிமுக + அமமுகவினர்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் - தினகரன் இணைந்து பெரிய வியூகத்தை அமைக்கின்றனர் என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.
ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டியதோடு, அமமுகவில் இருந்தும் ஆட்களை எடப்பாடி பழனிசாமி தூக்கி வரும் நிலையில் தினகரனும் ஓ பன்னீர்செல்வம் கைகோர்த்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட உள்ளனராம்.

எடப்பாடி அணி திட்டம்
விரைவில் பொதுச் செயலாளர் தேர்தலை அறிவித்து அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு முடிசூட்ட ஈபிஎஸ் அணியினர் திட்டமிட்டு வருகின்றனர். அதற்கு முதல் கட்டமாக, கட்சி உறுப்பினர் அட்டையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பதற்கு பதிலாக, இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டை வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளனர். அடுத்து மாவட்ட பொறுப்புகளுக்கு துடிப்பானவர்களை நியமிக்க ஈபிஎஸ் திட்டமிட்டு வருகிறாராம். அதைத் தொடர்ந்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகமும் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் முயற்சி
இதுஒருபுறம் என்றால் திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் ஓபிஎஸ். அவருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், டெல்டா மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளை இழுக்க ஈபிஎஸ் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக பின்னடைவைச் சந்தித்து வரும் ஓபிஎஸ் அணியினர், எடப்பாடி பழனிசாமியின் இந்தத் முறியடிக்கவும் தொண்டர்களைத் தக்க வைக்கவும் மாவட்டம்தோறும் தொண்டர்களைச் சந்திக்கவும், மக்கள் நலனுக்கான ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் ஓபிஎஸ் அணியினர் கூறுகின்றனர்.

ஈபிஎஸ் மீதான வெறுப்பால்
மேலும், எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, அவர் தலைமையில் சந்தித்த 8 தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தோல்வி அடைந்தார். இது எடப்பாடி பழனிசாமி மீதான வெறுப்பால் நிகழ்ந்துள்ளது என்றும் எனவே பழனிசாமி அதிமுகவில் இருந்து வெளியேற வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வலியுறுத்தி போஸ்டர்களை ஒட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம்
அதேபோல, எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பதற்காக டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் கைகோர்க்க ஓபிஎஸ் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இதனை தேனி மாவட்ட ஓபிஎஸ் அணியினர் உறுதி செய்துள்ளனர். தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் அணியினர் டிடிவி தினகரன் அணியோடு இணைந்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து மாசடைந்த குடிநீர் விநியோகம் செய்த பெரியகுளம் நகராட்சியை கண்டித்தும், செயற்கையாக குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்துவதாக பெரியகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சரவணகுமாரை கண்டித்தும், பெரியகுளம் நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக ஓபிஎஸ் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஓபிஎஸ் + அமமுக
ஓபிஎஸ் அணியின் தேனி மாவட்டச் செயலாளர் சையது கான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த அமமுகவினர் ஏராளமானோரும் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சையது கான், அமமுக மற்றும் அதிமுக வரும் காலங்களில் இணைந்து செயல்படுவதற்கு முன்னோட்டம் தான் இரு அணிகளும் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தியது எனத் தெரிவித்தார். மேலும், இந்தப் போராட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஒப்புதல் அளித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

கூட்டணிக்கு அச்சாரம்
இந்தப் போராட்டத்தை அதிமுக + அமமுக இணைந்து நடத்த அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதையே கூட்டணிக்கு அச்சாரமாக தாங்கள் கருதுவதாகவும், அதிமுக மற்றும் அமமுக கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் எனவும் கூறினார். ஜெயலலிதா காலத்தில் ஜெயலலிதாவிற்கு உறுதுணையாக இருந்த தினகரன், ஓபிஎஸ், சசிகலா, ஆகிய மூவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்றும் சையது கான் தெரிவித்துள்ளார்.

பெரிய வியூகம்
நேற்று மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, டிடிவி.தினகரனுடன் இணையும் வாய்ப்பு அமைந்தால் உறுதியாக இணைந்து செயல்படுவேன். விரைவில் சசிகலாவை சந்திப்பேன் என்றார். அமமுகவினரை எடப்பாடி பழனிசாமி இழுத்து வரும் நிலையில், வாய்ப்பு அமைந்தால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளதும், தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் அணியினர் + அமமுகவினர் இணைந்து பங்கேற்றதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் - தினகரன் இணைந்து பெரிய வியூகத்தை அமைக்கின்றனர் என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications