ஒரே நாளில் அடி மேல் அடி.. 2 விசயங்களை மலைபோல் நம்பும் ஓபிஎஸ்! "ஜெயிச்சா" ஆட்டம் தலைகீழ்
சென்னை: அதிமுக தலைமை பிரச்சனையில் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வெற்றி கிடைத்து வரும் நிலையில் 2 விசயங்களை ஓ.பன்னீர்செல்வம் மலைபோல் நம்புகிறார்.
அதிமுக ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டாலும், வங்கிக் கணக்குகளையும் கட்டிடத்தையும் முடக்கிவிடலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் போட்ட திட்டங்களும் இன்று தோல்வியில் முடிவடைந்து இருக்கின்றன.
அதிமுக பொதுச்செயலாளராக பல்வேறு தடைகளை மீறி பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தடுத்த நெருக்கடிகளில் இருந்து வெற்றிபெற்று முன்னேறி வருகிறார்.

பொதுச்செயலாளர்
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகள், போராட்டக்கங்களை கடந்து கடந்த 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது. அதில் எடப்பாடி பழனிசாமி அனைவரும் எதிர்பாத்ததைபோல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக பொறுப்பேற்றார்.

தலைமையக பிரச்சனை
அதே நேரம் பொதுக்குழுவுக்கு செல்லாத ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பெரும் திரளாக சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையை கைப்பற்றினர். இதனை கேள்விப்பட்டு அங்கு வந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் வருவாய் துறையினர் அதிமுக தலைமையகத்துக்கு சீல் வைத்தனர்.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த நிலையில் அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி சதீஷ்குமார் அமர்வு விசாரித்து வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதி அளித்தார். அதில் கட்சியின் தலைமையக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

வங்கி கணக்குகள்
முன்னதாக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் பொருளாளராகவும் தன்னுடைய அனுமதியின்றி வங்கி பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கக்கூடாது என்று வங்கிகளுக்கு கடிதம் எழுதினார், ஓ.பன்னீர்செல்வம். அதேநேரம் எடப்பாடி பழனிசாமியோ, திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக வங்கிகளுக்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கைகளை நிராகரித்த வங்கிகள் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு வங்கிக் கணக்குகளை ஒப்படைத்து உள்ளன.
Recommended Video

அடுத்து என்ன?
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டாலும், வங்கிக் கணக்குகளையும் கட்டிடத்தையும் முடக்கிவிடலாம் என்று நினைத்த ஓ.பன்னீர்செல்வத்தின் திட்டங்கள் தோல்வியடைந்து இருக்கும் நிலையில், 11 ஆம் தேதி பொதுக்குழுவுக்கு நடத்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கையும், பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட மனுவை எதிர்பார்த்து காத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இதில் தனக்கு சாதகமாக வந்தால் இதற்குமுன் தனக்கு எதிராக எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் செல்லாமல் போய்விடும் என்பது அவரது நம்பிக்கை.












Click it and Unblock the Notifications