ரவீந்திரநாத்தை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சநிலை.. எடப்பாடி அறிவித்ததெல்லாம் செல்லாது - ஓபிஎஸ்
சென்னை: அதிமுகவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்தை எடப்பாடி பழனிசாமி நீக்கி இருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ். தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகளை கடந்து 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சிறப்பு தீர்மானம் போட்டு நீக்கப்பட்டனர்.

18 பேர் நீக்கம்
இந்த நிலையில் இன்று மேலும் 18 பேரை கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பி.எஸ். மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.என்.பி.வெங்கட்ராமன், ஆர்.டி.ராமச்சந்திரன், எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், ஓம் சக்தி சேகர், கோவை செல்வராஜ், முன்னாள் எம்.பிக்கள் கோபாலகிருஷ்ணன், சையதுகான் உள்ளிட்டோர் நீக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் மருது அழகுராஜ், வினுபாலன், அஞ்சுலட்சுமி, சைதை எம்.எம்.பாபு, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், வைரமுத்து, அசோகன் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளன.

ரவீந்திரநாத் கண்டனம்
இதுகுறித்து பதிவிட்டுள்ள ரவீந்திரநாத், "என் அங்கீகாரம் - நாடாளுமன்றத்தில்.. இரட்டை இலையை அங்கீகரித்த ஒரே ஒரு வெற்றி... அது உண்மை தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த வெற்றி... கழக நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் எனக்கு கொடுத்த வரம்... அதை நீக்கவும்... ஒதுக்கவும்... எடுக்கவும்... கோமாளி கூடாரத்திற்கு இல்லை அதிகாரம்... கொள்ளைப்புற வழி வந்தவர்களுக்கு, கொள்கை விலகி சென்றது வெகு தூரம்!! பதவி கொடுத்தவர்களுக்கே... பாதகம் விளைவித்த, இடையில் வந்த 'எடை' யில்லா 'பாடி' க்கு விடை கொடுக்க வேண்டி வந்துவிட்டது நேரம்!! ஒன்றரை கோடி உண்மைத் தொண்டர்களே... ஒன்றிணைவோம்.. வெற்றி பெறுவோம்..." என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஓ.பி.எஸ். கருத்து
இதுகுறித்து தனது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோருடன் பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், "ரவீந்திரநாத்தை விலக்கி இருப்பது சர்வாதிகாரத்தின் உச்சநிலை. இது அவர்களின் எதேச்சதிகார, தன்னிச்சையான முடிவு. எடப்பாடி பழனிசாமி அறிவிக்கின்ற எந்த அறிவிப்பும் அதிமுகவின் சட்டப்படி செல்லாது." என்றார். மேலும் எடப்பாடிக்கு பதிலடியாக அவருடன் சேர்த்து 22 ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.












Click it and Unblock the Notifications