மெரினாவை மறந்த ஓபிஎஸ்.. சத்தமில்லாமல் அறிவாலயத்திற்கு அடிபோடும் ரகசியம்.. இதுதான் மாஸ்டர் பிளானா
சென்னை: தமிழக அரசியல் களத்தில் தற்போது வீசும் காற்று, ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறியைக் காட்டுகிறது.. குறிப்பாக, அதிமுகவின் முகமாக அறியப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இப்போது திமுகவின் வாசலை நோக்கித் தனது அரசியல் பயணத்தைத் திசைதிருப்பியுள்ளது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. அதிலும், ஜெயலலிதாவின் விசுவாசியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஓபிஎஸ், இன்று அவரது பிறந்தநாள் விழாக்களைத் தவிர்ப்பது என்பது ஓபிஎஸ் - திமுக என்ற புதிய கூட்டணியின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது..
திமுக பக்கம் ஓபிஎஸ் வரக்கூடும் என்று சில மாதங்களாகவே எதிர்பார்ப்பு ஏற்பட்டது, சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தனது மகன் ரவீந்திரநாத் உடன் நேரில் சந்தித்து பேசியது சாதாரணச் சந்திப்பல்ல..

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமியுடனான சட்டப் போரில் பின்னடைவைச் சந்தித்த நிலையில், டெல்லி தலைமையின் ஆதரவும் கிடைக்காததால் ஓபிஎஸ் இப்போது முழுமையாக திமுகவை நம்பியே தனது அரசியல் எதிர்காலத்தைத் திட்டமிடுகிறார்.. ஓபிஎஸ் - திமுக இடையிலான இந்த இணக்கம், வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு முக்கியத் திருப்பமாக அமையும் என்றே தெரிகிறது..
ஓபிஎஸ்ஸின் நம்பிக்கைக்குரிய தளபதிகளான வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே திமுக முகாமுக்கு சென்றுவிட்ட நிலையில், ஓபிஎஸ் மட்டும் தனியாக நிற்பது சாத்தியமில்லை.. அவரது ஆதரவு எம்.எல்.ஏ அய்யப்பன் சட்டசபையிலேயே திமுகவின் ஆட்சியைப் புகழ்ந்து பேசியது, அந்தப் பக்கம் செல்வதற்கான அச்சாரம் என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது..
பிரம்மாண்ட மரியாதை
ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளில் சென்னையில் பிரம்மாண்டமாக மரியாதை செலுத்துவதை ரத்து செய்துவிட்டு, போடியில் எளிமையாகக் கொண்டாடுவது என்பது, அவர் அதிமுக என்ற பிம்பத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஓபிஎஸ் - திமுக என்ற புதிய அடையாளத்திற்குத் தயாராகிவிட்டார் என்பதையே காட்டுகிறது..
அரசியல் விமர்சகர்களின் கணிப்புப்படி, ஓபிஎஸ்ஸை திமுகவில் இணைப்பதன் மூலம் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியைச் சிதைக்க திமுக திட்டமிடுகிறது..
திமுக - அறிவாலயம்
மறுபுறம், எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த திமுகவின் ஆதரவு ஓபிஎஸ்ஸுக்குக் கவசமாகத் தேவைப்படுகிறது.. பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற மூத்த தலைவர்கள் விலகிச் சென்ற சூழலில், ஓபிஎஸ்ஸுக்கு இப்போது இருக்கும் ஒரே புகலிடம் அண்ணா அறிவாலயம் மட்டுமே.. ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செய்யாமல் ஒதுங்கியிருப்பது, அவர் தனது பழைய விசுவாசங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு, புதிய அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார் என்பதையே உறுதிப்படுத்துகிறது..
இந்த ஓபிஎஸ் - திமுக நெருக்கம் என்பது வெறும் தேர்தல் காலக் கூட்டணி மட்டுமல்ல, அது ஒரு நீண்ட காலப் பாதுகாப்பு அரசியலாகவும் பார்க்கப்படுகிறது..
தேர்தல் தேதி நெருங்க நெருங்க, ஓபிஎஸ்ஸின் இந்தத் திடீர் மௌனமும் மாற்றமும் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய புயலுக்கு முன்னால் நிலவும் அமைதியாகவே கருதப்படுகிறது.. வரும் நாட்களில் அவர் திமுகவில் முறைப்படி ஐக்கியமாவார் என்ற பேச்சு இப்போது தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் எதிரொலிக்கிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications