சில்லு சில்லாய் சிதறி ஓடும் அடிபொடிகள்.. இன்னும் எத்தனை நாள் தான் வெயிட்டிங்! மவுன குருவாக ஓபிஎஸ்!
சென்னை: பல ஆண்டுகளாக தன்னுடன் பயணித்த முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக வேறு கட்சிகளில் இணைந்து வரும் சூழலில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்னமும் தெளிவான அரசியல் முடிவை எடுக்காமல் மவுனமாக இருப்பது, அவரை நம்பியிருந்த சொற்ப ஆதரவாளர்களிடையே கடும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகாரப் போராட்டத்தின் போது, சசிகலா தரப்பின் அழுத்தம் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ், பின்னர் அவருக்கு எதிராக 'தர்மயுத்தம்' என்ற அரசியல் போராட்டத்தை தொடங்கினார்.
அந்த காலகட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் ஆர்.விஸ்வநாதன், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்ட பலர் ஓபிஎஸ்ஸுக்கு துணைநின்றனர். ஆனால், ஊழல் வழக்கில் சிறை செல்லும் முன் சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்து சென்றது, அரசியல் சூழலை முற்றிலும் மாற்றியது.

ஓபிஎஸ் அரசியல் நிலை
சசிகலாவின் ஆதரவால் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பழனிசாமி, பின்னர் ஓபிஎஸ்ஸுடன் சமரசம் செய்து, சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒதுக்கியார். இதன் பின்னர், ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும், பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும், அதே நேரத்தில் முதல்வராகவும் இருந்து, இருவரும் இணைந்து அதிமுகவை வழிநடத்தினர். இந்த கூட்டணி சில காலம் வலுவாக செயல்பட்டது. ஆனால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குள் எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரம், அதிமுகவில் பெரும் பிளவை ஏற்படுத்தியது.
ஓ.பன்னீர்செல்வம் மவுனம்
இதன் உச்சமாக, பழனிசாமி தரப்பு, ஓபிஎஸ்ஸையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியிலிருந்து நீக்கியது. இதையடுத்து, ஓபிஎஸ் மீண்டும் பழனிசாமிக்கு எதிராக இரண்டாவது தர்மயுத்தத்தை அறிவித்தார். அதிமுக பொதுக்குழுவின் மூலம் பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பழனிசாமி, ஓபிஎஸ்ஸுக்கு இனி அதிமுகவில் இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்ததும், ஓபிஎஸ்ஸின் அரசியல் நிலை மேலும் சிக்கலானதாக மாறியது. இதன் காரணமாக, மீண்டும் அதிமுகவிற்குள் நுழைவதற்காக பாஜகவின் ஆதரவை நாடினார் ஓபிஎஸ். பாஜகவும், அவரை பயன்படுத்தி பழனிசாமியை கட்டுப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது.
பாஜக
ஆனால், அந்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக நேரடியாக பழனிசாமி தரப்புடன் கூட்டணி ஒப்பந்தத்தை உறுதி செய்தது. ஓபிஎஸ் மற்றும் தினகரனை அதிமுகவில் சேர்க்க பழனிசாமி மறுத்தாலும், பாஜக தனது கோட்டாவில் அவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்க திட்டமிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இறுதியில், தினகரனுக்கு மட்டும் பச்சைக்கொடி காட்டிய பழனிசாமி, ஓபிஎஸ்ஸுக்கு கதவை மூடிவிட்டார்.
மனோஜ் பாண்டியன்
இந்த அரசியல் குழப்பத்துக்கிடையே, ஓபிஎஸ்ஸுடன் இருந்த முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக விலகத் தொடங்கினர். மனோஜ் பாண்டியன், வைதிலிங்கம், மருது அழகுராஜ் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். சமீபத்தில், ஓபிஎஸ் மூலம் ராஜ்யசபாவுக்கு அனுப்பப்பட்ட தர்மரும் மீண்டும் அதிமுகவில் இணைந்தது, ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதுபோன்ற சூழலிலும், ஓபிஎஸ் எந்த தெளிவான அரசியல் முடிவையும் அறிவிக்காமல் இருப்பது, அவரை நம்பி இன்னமும் காத்திருக்கும் வெல்லமண்டி நடராஜன் போன்ற சில நிர்வாகிகளை கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.
ஓபிஎஸ் தரப்பு
தென் மாவட்டத்தை சேர்ந்த ஓபிஎஸ் தரப்பு நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அதிமுகவில் மீண்டும் இணையலாமா, அல்லது பாஜகவுடன் ஒப்பந்தம் செய்து, தனது அமைப்புக்கும் ஆதரவாளர்களுக்கும் சில தொகுதிகளை உறுதி செய்யலாமா என ஓபிஎஸ் எண்ணினார். ஆனால், பழனிசாமி அதற்கு தடையாக இருக்கிறார். இனி காலம் கடத்தாமல், விஜயுடன் கூட்டணி அமைப்பதே அரசியல் ரீதியாக சரியான முடிவாக இருக்கும்" என்றார்.
திமுக
மேலும், திமுகவில் இணையும் யோசனையும் சிலர் முன்வைக்கின்றனர். ஆனால், மூன்று முறை முதல்வராக இருந்த ஒருவர் திமுகவில் சேர்வது, ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. எந்த முடிவாக இருந்தாலும், இனியும் தாமதிக்காமல் விரைவில் அறிவிக்க வேண்டும் என்பதே, அவரை நம்பியிருக்கும் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications