ஆடி போய் ஆவணி வரட்டும்.. அதிரடிக்கு ரெடியாகும் ஓபிஎஸ்! எடப்பாடிக்கு எதிராக பிரம்மாஸ்திரம்
சென்னை: அதிமுக உட்கட்சிப் பூசல் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் ஆவணி மாதம் வந்தவுடன் சசிகலாவை கட்சியில் இணைத்து பயணிக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 3 வாரங்கள் கடந்துள்ளன. இதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப் உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வமும் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.
இந்த வேலை வேண்டாம்.. நாகரீகம் முக்கியம்.. அதிமுக தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் போட்ட உத்தரவு!
ஓபிஎஸ் நகர்வுகள்
இருப்பினும் இதற்கு எதிராக தேர்தல் ஆணையம், நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஓ.பன்னீர்செல்வம் அடையாறில் உள்ள தனது இல்லத்தில் அடுத்தடுத்து தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் சொந்த ஊரான தேனிக்கு சென்று ஆதரவாளார்களை சந்தித்து வருகிறார்.
நம்பிக்கை
கட்சியிலிருந்து நீக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டபோதிலும், ஓ.பன்னீர்செல்வம் மனம் தளராமல் வழக்குகள், அரசியல் நகர்வுகளை எடுத்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் டெல்லி மற்றும் மன்னார்குடி. ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமானதில் இருந்தே டெல்லியை மலைபோல் நம்பி தனது ஆதரவாளர்களுக்கு ஊக்கம் கொடுத்து வந்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
ஆறுதல்
அதேநேரம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் நடக்கும் வருமான வரி சோதனைகள், டெல்லியில் பிரதமர் மோடி நேரம் கொடுக்காதது போன்றவை ஓ.பன்னீர்செல்வத்துக்கு சற்று நம்பிக்கையை கொடுத்தன. ஆனாலும் டெல்லி தரப்பு ஒரு பிடி கொடுக்காமலேயே உள்ளதே. இதே நிலையில்தான் சசிகலா, டிடிவி தரப்பும் இருந்து வருகிறது.
சசிகலா
தொடர்ந்து அமைதியாக காய் நகர்த்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் ஆடி மாதம் முடிந்து ஆவணியில் தனது அதிரடியை காட்ட இருப்பதாக தேனி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சசிகலா, தினகரனுடன் இணைந்து செயல்படுவது முடிவாகிவிட்டது என்றும், ஆவணி மாதம் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதிரடி
அண்மையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் பேட்டியளித்தபோது ஓ.பிஎஸுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக தீர்க்கமான முடிவை எடுக்காததைபோல் காட்டிக்கொண்டார்கள். ஆனால் ரகசியமாக அனைத்து பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாகவும், சசிகலாவின் சகோதரர் திவாகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் பேசி முடித்துவிட்டதாகவும், விரைவில் சசிகலாவுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டு இருவரும் மாநிலம் முழுவதும் பயணம் சென்று தொண்டர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.