விஜய் கட்சியில் ஓபிஎஸ் மகன்; மாநாட்டுக்கு பண உதவி! தென்மாவட்டங்களில் எடப்பாடிக்கு செக்!
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பாஜக பக்கம் போக இருப்பதாகப் பலரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அவர் விஜய் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஓபிஎஸ் ஒரு பக்கம் தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அவரது மகனும் தேனி தொகுதியின் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஓபி ரவீந்திரநாத் விரைவில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது. அதிமுக எடப்பாடி பழனிசாமியின் முழுக் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது. ஒரு பக்கம் டிடிவி தினகரன் கட்சியை எடப்பாடியிடம் இருந்து மீட்கவில்லை என்றால் அதிமுக காணாமல் போய்விடும் என்று தொடர்ந்து பேசி வருகிறார்.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்திலேதான் போட்டியிடுவேன் எனச் சவால் விடுத்துக் கொண்டிருந்த ஓபிஎஸ் கடைசி நேரத்தில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாகப் பலாப்பழம் சின்னத்தில் நின்று தோல்வியைத் தழுவினார். கடந்த 2022இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவின் முடிவின் படி ஓபிஎஸ் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு, அக்கட்சியின் ஒரே ஒரு எம்பியாக இருந்து வந்த ரவீந்திரநாத்தை அதிமுக என அங்கீகரிக்கக் கூடாது எனச் சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். இதனிடையே தேர்தல் வேட்பு மனுவில் தவறான தகவல்களை அளித்ததற்காக அவரது பதவியைச் செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது. அதன்பின்னர் உச்சநீதிமன்றம் வரை சென்றார் இந்தத் தேனி எம்பி. அதற்குள் 2024 மக்களவைத் தேர்தலே நடந்து முடிந்துவிட்டது. அதிமுகவில் அப்பாவுக்கும் மகனுக்கும் சீட்டும் கிடைக்கவில்லை.
இப்போது ஓபிஎஸ் வழக்கு மேல் வழக்கு எனப் போட்டு அதிமுகவில் உரிமை கோரிவரும் நிலையில், அவரது மகன் ரவீந்திரநாத் புதியதாக விஜய் தொடங்கி இருக்கும் கட்சிக்குச் செல்ல இருப்பதாக தகவல்கள் கசியத் தொடங்கி உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் விஜய் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு, ராமநாதபுரத்தின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், புதியதாக அரசியல் பிரவேசம் செய்துள்ள விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். கூடவே அவருடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறோம் என்றும் கூறியிருந்தார்.
ஆனால், விஜய் அவரது கட்சியின் பெயரை கடந்த பிப்ரவரி 2 ஆம் அறிவித்தபோது ரவீந்திரநாத் அவரது எக்ஸ் பக்கத்தில் எந்த வாழ்த்து செய்தியையும் பகிரவில்லை. ஒரு மாதம் கழித்து மார்ச் மாதம்தான் பொதுவெளியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் பதிலளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளுக்கு ஒரு வாழ்த்தைக் கூறியிருந்தார்.

அதில், அதன்பின்னர் கடந்த ஜூலை 22 ஆம் தேதி 50வது பிறந்தநாளைக் கொண்டாடிய விஜய்க்கு ஓபி ரவீந்திரந்திரநாத் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளிப்படையாக வாழ்த்து செய்தியைப் பதிவிட்டிருந்தார். அதில், "இன்று (22.06.2024) 50வது பிறந்தநாள் காணும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், அன்பு சகோதரருமான விஜய் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, மேலும் நீண்ட ஆயுளோடு கலைத்துறையிலும், மக்கள் பணியிலும் பல சாதனைகள் படைக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
கட்சி தொடங்கிய போது வெளிப்படையாக வாழ்த்து செய்தியைப் பதிவிடாத அமைதி காத்த ரவிந்திரநாத், விஜய் கொடியை அறிமுகம் செய்த அன்று மட்டும் தனது எக்ஸ் தளத்தில், "தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், அன்பு சகோதரருமான விஜய் அவர்களின் அவருடைய அரசியல் பயணம் வெற்றி பெற, மக்கள் பணி சிறக்க எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் பயணத்தில் தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் அவருடைய அரசியல் பயணம் வெற்றி பெற, மக்கள் பணி சிறக்க எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று எழுதி இருந்தார்.

இவர் ஆரம்பக் காலத்தில் விஜய் ரசிகராக இருந்தார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அரசியல் ரீதியாக அவர் அதிமுகவில் தான் செயல்பட்டு வந்தார். ஓபிஎஸ் ஆதரவாளர்களை இணைத்துக் கொண்டு அதிமுகவை மீட்கும் போராட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் காலத்தில் கூட அவருக்கு துணையாக ரவீந்திரநாத் களத்தில் தொண்டர்களுடன் நின்றதே இல்லை. ஆனால், அப்பாவுடன் இணைந்து டெல்லியில் மூன்றாவது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்ற போது அங்கே சென்று விழாவில் கலந்து கொண்டார். ஆகவே அவர் பாஜக பக்கம் போகலாம் என்று சிலர் கருதி வந்தனர். ஓபிஎஸும் தனது ஆதரவாளராக மகன் பாஜகவில் இருக்கட்டும் என ஒரு பக்கம் நினைத்துக் கொண்டிருந்தார். அதேசமயம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகனையே தன் பக்கம் இழுக்க முடியாதவர் எப்படி கட்சியை மீட்கப் போகிறார் என்றும் புலம்பிக் கொண்டிருந்த போதுதான் ரவீந்திரநாத் கொஞ்சம் கொஞ்சமாக விஜய் பக்கம் தாவ முயற்சி செய்து வருகிறார் என்கிறார்கள். அவரது ஆதரவாளர்கள் சிலர் விஜய் மாநாட்டில் ரவீந்திரநாத் தவெகவில் இணைவதற்காகத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகக் கூறுகின்றனர்.
அதன் மூலம் எடப்பாடிக்கு வரும் 2026 தேர்தலில் ஒரு நெருக்கடியைத் தர வேண்டும் என்பது ஓபிஎஸ் மகனின் திட்டமாக உள்ளது. கூடவே தனது சமூகத்தினரை விஜய் பக்கம் கொண்டு சேர்ப்பதன் மூலம் தென்மாவட்டங்களிலிருந்து எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவை துடைத்து எறிய முடியும் என்றும் ரவீந்திரநாத் கணக்குப் போட்டுக் காத்திருக்கிறார் என்கிறார்கள். கூடவே விஜய் மாநாட்டுக்கான பொருளாதார உதவிகளைச் செய்ய அவர் காத்திருப்பதாகவும் தூது விட்டுள்ளார். விஜய் மாநாட்டுக்கு 10 லட்சம் பேர் வரை இலக்கு நிர்ணயித்துள்ளார். ஆகவே நிதி நிலைமையை உணர்ந்து ரவீந்திரனை உள்ளே கொண்டுவருவார் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications