திடீர் ‘ட்விஸ்ட்’.. அண்ணாமலை ‘பாய்சன்’ கலக்குறாராம்.. பாயும் ஓபிஎஸ் டீம்.. அதிமுகவில் என்ன நடக்குது?
அண்ணாமலைக்கு எதிராக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது ஓபிஎஸ் தரப்பு.
சென்னை : பாஜகவை எடப்பாடி பழனிசாமி தரப்பு கடுமையாக அட்டாக் செய்து வந்த போதெல்லாம் பாஜகவை விட்டுக் கொடுக்காமல் ஓபிஎஸ் தரப்பினர் பேசி வந்த நிலையில், தற்போது அண்ணாமலைக்கு எதிராக ஆவேசத்துடன் கிளம்பியுள்ளது ஓபிஎஸ் அணி.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவாகச் செயல்படுவதாக ஓப்பனாக போட்டு உடைத்துள்ளார் ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ்.
பாஜகவுடன் தங்களுக்கு இருக்கும் நல்லுறவில் அண்ணாமலை பாய்சன் கலக்க முயற்சி செய்கிறார் எனக் குற்றம்சாட்டியுள்ளார் மருது அழகுராஜ்.
பாஜக யாருக்கு ஆதரவு அளிக்கிறது என்பதில் பெரும் சந்தேகங்கள் இருந்து வந்த சூழலில் அண்ணாமலை, ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவளிக்கிறார் என ஓபிஎஸ் அணி நிர்வாகியே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் முடிவு
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே நிலவி வரும் மோதலைத் தொடர்ந்து, பொதுக்குழு தொடர்பான வழக்கில் விரைவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இதற்கிடையே, இரு தரப்பும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வாய்ப்பாக வந்தது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல். ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் போட்டியிட ரெடியான நிலையில், வலுவான வேட்பாளர் நிற்க வேண்டும் என ஆரம்பம் முதலே சொல்லி வந்தது பாஜக. அதேசமயம், பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் விட்டுக்கொடுக்க தயார் என்றும் அறிவித்தார் ஓபிஎஸ்.

இரு அணி வேட்பாளர்கள்
பாஜக போட்டியிட விரும்பாத சூழலில், இரட்டை இலை கேட்டு ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களே அதிகாரப்பூர்வ வேட்பாளரை தேர்ந்தெடுக்க வெண்டும் என்று தீர்ப்பு வந்தது. இதையடுத்து, ஈபிஎஸ் அணி, கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக முன்மொழிந்து பொதுக்குழு ஆதரவுடன் தேர்வு செய்தது. ஓபிஎஸ் தனது அணி வேட்பாளரை வாபஸ் பெற்றார். முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் சந்தித்துப் பேசியிருந்தார்.

பாஜக தலையிடலாமே
பாஜக கேட்டுக்கொண்டபடி, ஓபிஎஸ், இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவளித்து தனது வேட்பாளரை திரும்பப் பெற்றார். இது ஓபிஎஸ்ஸுக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில் தான் அண்ணாமலைக்கு எதிராகப் பொங்கித் தீர்த்துள்ளது ஓபிஎஸ் அணி. இதுவரை, ஓபிஎஸ் மட்டுமல்லாமல் அவரது அணியினர் கூட பாஜகவை பெரிதாக விமர்சித்துப் பேசியதில்லை. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று ஈபிஎஸ் அணியினர் சொன்னபோது கூட, பாஜக தலையிடுவதில் தவறில்லை என்று சொன்னவர்கள் ஓபிஎஸ் தரப்பினர்.

பகீர் குற்றச்சாட்டுகள்
இந்நிலையில் தான் ஓபிஎஸ் அணியினரே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் ஓபிஎஸ் தரப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் கலந்துகொண்டார். அப்போது அவர் அதிமுக - பாஜக உறவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பாஜகவுக்காக ஓபிஎஸ்
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மருது அழகுராஜ், "இரட்டை இலை முடக்கப்படுவதற்கு தான் காரணமாக இருக்கக்கூடாது எனக் கருதி ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் முறையிடாமல் ஒதுங்கியுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி அக்கிரமத்தோடு செயல்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்துள்ளார் ஓபிஎஸ். வேட்பாளர் தேர்வில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பாஜக தேர்தலில் போட்டியிட்டால் ஓபிஎஸ் பாஜகவை ஆதரிப்போம் எனச் சொன்னார். அதற்கு காரணம் இருக்கிறது. பாஜக போட்டியிட்டால் எடப்பாடி பழனிசாமியும் அவர்களை ஆதரிப்பார். டிடிவி தினகரனும் அவர்களை ஆதரிப்பார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது காங்கிரஸ். எனவே பாஜக எதிர்த்து போட்டியிட்டால் 2024 தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதை கருதியே ஓபிஎஸ் அவ்வாறு சொன்னார்.

பாய்சன் - அண்ணாமலை
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஏற்பட்டுள்ள பிளவில் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த பாஜக உளமார முயற்சி செய்கிறது. பாஜகவின் அந்த எண்ணத்தை நாங்கள் உளமார வரவேற்கிறோம். ஆனால் தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருக்கும் அண்ணாமலை தொடர்ந்து ஒருதலைச்சார்பாக நடந்து கொண்டு பாஜகவோடு எங்களுக்கு இருக்கும் நல்லுறவில் 'பாய்சன்' கலப்பதற்கு முயற்சிக்கிறார்.

ஓபிஎஸ் தான் 1
சமீபத்தில் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான சமாதான முயற்சிகளுக்காக ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை சந்திக்கச் சென்றார். ஒருங்கிணைப்பாளர் தான் 1; இணை ஒருங்கிணைப்பாளர்: 1-ஏ. முதலில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸை சந்தித்து விட்டுத்தான் எடப்பாடியை சந்திக்கச் சென்றிருக்க வேண்டும். ஆனால், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியையும் ஈபிஎஸ் ராஜினாமா செய்துவிட்டதால் அவர் பதவியில்லா பழனிசாமிதான். அவரைச் சந்தித்துவிட்டு வந்து, ஓபிஎஸ்ஸிடம் உங்கள் வேட்பாளரை நீங்கள் திரும்பப் பெற வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருப்பது எடப்பாடி பழனிசாமியின் அபகரிப்பு அரசியலுக்கு ஆதரவாக பாஜகவை கொண்டு செல்லும் வேலையை அண்ணாமலை செய்கிறாரோ என்ற ஐயம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

வரவேற்கக்கூட இல்லை
ஓ.பன்னீர்செல்வம் கமலாலயத்திற்கு சென்று எங்கள் வேட்பாளர் செந்தில் முருகனுக்கு ஆதரவு கேட்டுச் சென்றபோது, அண்ணாமலை வாசல் வரை வந்து வரவேற்கவும் இல்லை. திரும்பிச் செல்லும்போது வாசல் வரை வந்து வழியனுப்பவும் இல்லை. இது விருந்தோம்பல் பண்பற்ற செயல். ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர், மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஓபிஎஸ். பாஜக அலுவலகத்திற்கு முதல் முறையாக சென்ற அவரை, அந்த அலுவலகத்திலேயே இருந்த அண்ணாமலை வாசலுக்கு வந்து வரவேற்காததன் மூலமே எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை சாதகமாக இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறார்.

அப்பம் - நரி
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அண்ணாமலை அதிமுக விவகாரத்தில் நடுநிலை தவறி செயல்பட்டுள்ளார். ஒரு கட்சியில் நடக்கும் அண்ணன் தம்பி சண்டையில், அப்பத்தை பங்கிட்ட கதையில் நரி செய்த சூழ்ச்சி போல அண்ணாமலையின் செயல் இருப்பதை கண்டிக்கிறோம். அச்செயலின் மீது எங்களுக்கு இருக்கும் வருத்தத்தை நாங்கள் தீர்மானமாக இயற்றி இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார் மருது அழகுராஜ்.

கடைத்தெருவுக்கு வந்த விவகாரம்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக செயல்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்திருந்தாலும் ஓபிஎஸ் தரப்பினர் அப்படியான பார்வையை முன்வைக்காமலேயே இருந்து வந்தனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான சம்பவங்கள் தொடர்பாக, அண்ணாமலையைக் குறிவைத்து ஓபிஎஸ் தரப்பினர் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது ஓபிஎஸ் அணி - பாஜக இடையேயான மோதலுக்கு வித்திட்டுள்ளது.












Click it and Unblock the Notifications