சென்னை வரும் பிஎல் சந்தோஷ்.. ஓபிஎஸ்க்கு போனை போட்ட அண்ணாமலை.. மீண்டும் பாஜகவுடன் கூட்டணி?
சென்னை: நாளை தமிழ்நாடு வரும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷை சந்திக்க முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு பாஜக அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸை இணைக்க பாஜக முயல்வதாகப் பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் மாதத்தில் சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். அதன்பின் மதுரை வந்த அமித்ஷாவை ஓபிஎஸ் சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அமித்ஷா தரப்பில் ஓபிஎஸ்க்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இதன்பின் ஜூலை கடைசி வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்தார்.

அப்போது ஓபிஎஸ் தரப்பில் பிரதமர் மோடியை வரவேற்க நேரம் கேட்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடியும் நேரம் கொடுக்கவில்லை. இதனால் ஆதங்கத்தில் இருந்த ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதன்பின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடுத்த 2 மணி நேரத்தில் முதல்வர் ஸ்டாலினையும் ஓபிஎஸ் சந்தித்தார்.
அந்த சந்திப்புக்குப் பின், அரசியலில் எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை என்று தெரிவித்து ஓபிஎஸ் அதிர்ச்சி கொடுத்தார். இதன்பின் பாஜகவுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இதனிடையே ஓபிஎஸ் தரப்பில் அண்ணாமலையை தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. அண்ணாமலை மூலமாக பாஜக மேலிடத்தைத் தொடர்பு கொள்ள முயற்சிகள் நடப்பதாக விவரமறிந்தவர்கள் கூறினர்.
ஏனென்றால் தென் மாவட்டங்களில் பாஜக வேகமாக வளர்ச்சி பெறுவதற்கும், முக்குலத்தோர் சமூக வாக்குகளை பாஜக அறுவடை செய்ய ஓபிஎஸ் உடனான கூட்டணி பாஜகவுக்கு முக்கியம் என்பதை அண்ணாமலைக்கு அனுபவப்பூர்வமாக அறிவார். லோக்சபா தேர்தலில் தென் மாவட்டங்களில் பாஜக 2வது இடத்திற்கு வருவதாக ஓபிஎஸ் உடனான கூட்டணி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை இணைக்க பாஜக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. நாளை சென்னையில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜகவின் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. இதற்காக பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் சென்னை வரவுள்ளார்.
பிஎல் சந்தோஷ் மற்றும் அண்ணாமலை இடையிலான உறவு அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த நிலையில், பிஎச் சந்தோஷை சந்திக்க ஓபிஎஸ் தரப்புக்கு தொலைப்பேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இன்று இரவு ஓபிஎஸ் சென்னைக்கு வர வாய்ப்பு உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் ஓபிஎஸ் தரப்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின், ஓபிஎஸ் சென்னைக்குப் புறப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications