அதிமுகவில் சேரவே முடியாது? புதிய கட்சியை தொடங்கும் ஓபிஎஸ்? பெயர் என்ன தெரியுமா?
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புதிய கட்சியை தொடங்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்தவர்களில் ஓபிஎஸ்ஸும் ஒருவர். ஜெயலலிதா கைதாகி சிறை செல்ல நேரிட்ட போதெல்லாம் அவரை முதல்வராக்கிவிட்டு சென்றார்.

அவரது மறைவுக்கு பிறகும் அவரே முதல்வரானார். 2 மாதங்கள் கூட நீடிக்காத நிலையில் சிலரின் நிர்பந்தத்தால் முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் தர்மயுத்தம் நடத்தியது அனைவருக்கும் தெரிந்ததே!
பொதுச் செயலாளர்
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலா சிறை சென்றதால் முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்தார். இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும் ஒன்றிணைந்தனர். பொதுக் குழுவை கூட்டி அதிமுக பொதுச் செயலாளர் பதவியை நீக்கிவிட்டனர்.
நிரந்தர பொதுச் செயலாளர்
ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச் செயலாளர் என அறிவித்தனர். மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவியை உருவாக்கி அதில் ஓபிஎஸ்ஸும், எடப்பாடியும் முறையே பொறுப்பேற்றுக் கொண்டனர்.
ஒற்றைத் தலைமை
இந்த நிலையில்தான் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதற்கு ஓபிஎஸ் எதிர்த்தார். பிறகு சட்ட போராட்டங்கள் எல்லாம் நடத்தி பார்த்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஓபிஎஸ்ஸை, பொதுக் குழுவினர் அதிமுகவில் இருந்தே நீக்கினர்.
அதிமுகவில் இணைய
இதையடுத்து எப்படியாவது அதிமுகவில் இணைந்து விட வேண்டும் என பிரயத்தனம் செய்து வருகிறார். இதற்காக பாஜக மூலம் காய் நகர்த்தி வந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும் என பாஜக தெரிவித்தும் அதை எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தல்
கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லாத போது ராமநாதபுரம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து தனிச்சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிட்டு அதிகமான வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.
டிடிவி தினகரன்- ஓபிஎஸ்
டிடிவி தினகரன், ஓபிஎஸ் எல்லாம் பாஜக கூட்டணியில் இருக்கும் நிலையில் அதிமுக கூட்டணி அமைக்குமா என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் பாஜக- அதிமுக கூட்டணி ஏற்பட்டது. இந்த கூட்டணியில் ஓபிஎஸ் இடம் பெற கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு வலியுறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
அமித்ஷா சென்னை வருகை
இந்த நிலையில் நேற்று அமித்ஷா செய்தியாளர்கள் சந்திப்பில் ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைக்க வேண்டும் என வலியுறுத்துவீர்களா என கேட்டதற்கு அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என கூறிவிட்டார். இது ஓபிஎஸ்ஸுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.
அதிமுகவில் தன்னை இணைக்காவிட்டால்
இந்த நிலையில் அதிமுகவில் தன்னை இணைக்காவிட்டால் புதிய கட்சியை ஓபிஎஸ் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என தேர்தல் ஆணையத்தில் பெயர் பதிவு செய்துவிட்டதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன.
புதிய கட்சிக்கு ரெடி
பண்ருட்டி ராமசந்திரனின் ஆலோசனையை ஓபிஎஸ் ஏற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிராமன் என்ற ஆதரவாளர் மூலம் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை ஓபிஎஸ் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
கூட்டணி
கடந்த டிசம்பரில் அளித்த விண்ணப்பித்திற்கு 2025 ஜனவரி மாதம் தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது. எனவே வரும் தேர்தலில் அமையும் கூட்டணியை பொருத்து ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications