டெல்லி விசிட்.. காவித் துண்டு.. அதிமுகவிலிருந்தே ஓ பன்னீர் செல்வம் நீக்கமா?.. மாஜி எம்பி சந்தேகம்
சென்னை: இன்று நடைபெறவுள்ள அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வத்தின் பொருளாளர் பதவி பறிப்பா இல்லை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கமா என முன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவை என நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இரட்டை தலைமைகளில் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமையாக பதவியேற்க வேண்டும் என 95 சதவீத நிர்வாகிகள் விரும்புவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் வழக்கம் போல் இந்த பதவியையும் விட்டுக் கொடுக்க ஓபிஎஸ் விரும்பவில்லை. இதனால் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவே தர்மயுத்தம் 2.0 வை நடத்தி வருகிறார். அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் ஓபிஎஸ் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டார். அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. அவரது வேன் டயர் பஞ்சராக்கப்பட்டது.

பொதுக் குழு கூட்டம்
இந்த நிலையில் ஓபிஎஸ் கடந்த 23 ஆம் தேதி பொதுக் குழுகூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறிய பின்னர் அவர் நேராக டெல்லி சென்றார். அங்கு பிரதமரை சந்திக்க முயற்சித்தும் முடியவில்லை. இதையடுத்து பிரதமர் ஜெர்மனி சென்றதால் ஓபிஎஸ் சென்னை திரும்பினார். இதையடுத்து நேற்றை தினம் ஓபிஎஸ் மதுரை சென்றார்.

விமான நிலையத்தில்
அங்கு விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர் தன்னை சுற்றி சதி வலை பின்னப்பட்டது. அது யார் என தனக்கு தெரியும். அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்துவோருக்கு விரைவில் மக்கள் பாடம் புகட்டுவர் என்றார். இதையடுத்து அவருக்கு தேனியில் பாஜக நிர்வாகிகள் காவிதுண்டை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

அதிமுகவில் சலசலப்பு
இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைவார் என சொல்லப்பட்டது. இதற்கேற்ப முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் நேற்றைய தினம் பேசும் போது அதிமுக தொண்டர்களை மூளைச் சலவை செய்து தேசிய கட்சியில் இணைத்து விடலாம் என கனவு காண வேண்டாம் என ஓபிஎஸ்ஸை மனதில் நினைத்தே சொன்னதாக தெரிகிறது.

எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை
இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் கூடுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஓபிஎஸ்ஸும் பதில் அறிக்கைவிடுத்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் தலைமைக் கழக குழு கூட்ட முடியாது என்றார்.

ஓபிஎஸ் நீக்கமா
இன்றைய தினம் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக ஏதேனும் ஒரு முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இதுகுறித்து அதிமுகவின் முன்னாள் எம்பியான கே சி பழனிசாமி கூறுகையில் நடைபெறும் தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பி.எஸ் ன் பொருளாளர் பதவி பறிப்பா அல்லது கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கமா? இதேபாணியில் தான் சசிகலா அவர்களின் பதவியும் பறிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில் நிறுவனர்கள் என்ற பெயரில் ஓபிஎஸ், இபிஎஸ் பெயர்கள் அச்சிடப்பட்ட நிலையில் நேற்று முதல் நிறுவனர் - எடப்பாடி பழனிசாமி என அச்சிடப்பட்டுள்ளது. இதிலிருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications